சமூக நீதி கூட்டமைப்பு.. முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்துடன் சோனியா, ராகுலை சந்தித்த டி.ஆர்.பாலு!
டெல்லி: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்பி டிஆர் பாலு நேரில் சந்தித்தார்.
சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின், அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
பிரதமர் வேட்பாளர் என்ற கனவில் இது போல் ஒரு கூட்டமைப்பை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கியதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருந்தார்.
தமிழக சட்டம், ஒழுங்கு குறித்து.. டிஜிபி சைலேந்திரபாபுவுடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
அதிமுக இணைய மறுப்பு
சமூக நீதி கூட்டமைப்பில் அதிமுக இணைய விரும்பவில்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் பதில் கடிதம் எழுதினார். இந்த நிலையில் சமூகநீதி கூட்டமைப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்துடன் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு சந்தித்தார்.
முதல்வருக்கு பதில் கடிதம்
அப்போது முதல்வர் ஸ்டாலினின் கடிதத்தை அவர்களிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சி இணையவதாக கூறிய சோனியா காந்தி, கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நியமித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இச்சந்திப்பின்போது, ராகுல் காந்தியும் உடனிருந்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி
அதோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவையும் டி.ஆர் பாலு எம்பி சந்தித்த நிலையில் அவர், முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய பதில் கடிதத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்க தானும், தான் சார்ந்த இயக்கமும் ஜனநாயக - மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகளுடன் இணைவதாகவும், இதுகுறித்து நேரில் கலந்தாலோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியும் இணைகிறது
அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமூகநீதிக் கருத்தியலை தேசிய அளவில் முன்னெடுப்பதற்காக வாழ்த்து தெரிவித்து, இந்த அமைப்பினை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து நாம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தியும் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது. இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி முழு ஒத்துழைப்பினை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.