“அப்துல்லா என் தம்பி.. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் ஜூஸ் கொடுப்பாங்க”: திருச்சி சிவா
டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் இன்று வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவின் மீது பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, "அப்துல்லா என் தம்பி, நான் அவர் அண்ணன். தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் போது இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்குவார்கள்." என உருக்கமாகப் பேசியுள்ளார்.
திருத்தப்பட்ட வக்பு வாரிய மசோதா நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் வஃக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இன்று வஃக்பு மசோதா மீதான விவாதத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசினார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, "வஃக்பு சட்டத்திருத்த மசோதா மோசடியானது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது. வக்ஃபு திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகவே வக்ஃபு திருத்த மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம்.
வஃக்பு மசோதா நிறைவேறிய நாள் ஒரு வருத்தமான நாள். நாட்டின் முன்னேற்றத்துக்கு இஸ்லாமியர்கள் ஏராளமான பங்களிப்பைச் செய்துள்ளனர். ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்பதை ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது.
வக்ஃபு திருத்தச் சட்ட மசோதா கொண்டுவருவது நிர்வாகத்தை மேம்படுத்த எனக் கூறுவது உண்மைக்கு புறம்பானது. வக்ஃபு நிர்வாகத்தையே கைப்பற்றுவதற்குதான் திருத்த மசோதா கொண்டு வரப்படுகிறது. வக்ஃபு மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மதச்சார்பின்மைக்கு எதிரானது. பல மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில் ஒன்றிய அரசு நினைப்பது சாத்தியம் இல்லை.
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் கூட 5 கி.மீ தூரத்தில் உள்ள உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்படக் கூடும். அனைவருக்குமான வளர்ச்சி என்று கூறுகிறது. முஸ்லிம்களுக்கு மட்டும் வேறு கொள்கையை பாஜக அரசு கடைப்பிடிக்கிறது. முஸ்லிம்களை ஓரம் கட்டுவது, பொது நீரோட்டத்தில் இருந்து விலக்குவதுதான் ஆளும் கட்சியின் கொள்கை.
அரசின் செயலால் முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப்படுகின்றனர். பாதுகாப்பு இல்லாதவர்களாக உணர்கின்றனர். மசோதாக்களை ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வக்ஃபு மசோதாவை ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் நடவடிக்கையே அதற்கு எடுத்துக்காட்டு. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் வக்ஃபு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் அளித்த திருத்தங்கள் எதுவுமே ஏற்கப்படவில்லை.
அப்துல் கலாம் போல பல இஸ்லாமியர்கள் இந்திய நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வைத்திருக்கிறார்கள்; இங்கே இப்போதுகூட, அப்துல்லா என் தம்பி, நான் அவர் அண்ணன். தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் போது இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்குவார்கள். இத்ற்குப் பெயர் தான் ஒற்றுமை. நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத நல்லிணக்கத்தோடு இருக்கின்றன.
ஒன்றிய அரசிற்கு காதுகள் இருக்கிறது.ஆனால் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு அது செவிமடுக்காது.கண்கள் இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அதன் பார்வை படாது. வாய் இருக்கிறது. அது அவதூறுகளை மட்டுமே பரப்பும்.
கைகள் இருக்கிறது. அது தன் அதிகாரத்தை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்க மட்டுமே செய்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications