நீட் தேர்விலிருந்து விலக்கு.. பிரதமரை சந்தித்து ஸ்டாலினின் கடிதத்தை அளித்த திமுக எம்பிக்கள்
டெல்லி: தமிழக பிரச்சினைகள், கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து திமுக எம்பிக்கள் முக ஸ்டாலின் அளித்த கடிதத்தை அளித்தனர்.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை திமுக எம்பிக்கள் திடீரென சந்தித்து பேசியுள்ளனர். அவரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த கடிதத்தையும் அளித்தனர்.
தமிழக பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்துடன் அவர்கள் மோடியை சந்தித்தனர்.

நீட் தேர்வு
அந்த கடிதத்தில் பல்வேறு கோரிக்கைகளும் பிரச்சினைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும்.

அரசின் திட்டங்கள்
மத்திய அரசுப் பணியில் தமிழகத்தில் உள்ளூர் மக்களுக்கு 90 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவ கட்டுமான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை கைவிட வேண்டும்.

மேகதாது அணை
தமிழகத்துக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய ரூ 7,825 கோடியை அளிக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்கக் கூடாது.

தனியார்மயமாக்கக் கூடாது
மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை தொடர்பு மொழியாக பயன்படுத்த வேண்டும். சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை திமுக எம்பிக்கள் மோடியிடம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications