தென்பெண்ணை ஆறு வழக்கு.. ’அரசியலை கலக்காதீர்கள்’.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்!
டெல்லி: தென்பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை டிச.14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தென்பெண்ணையாற்றில் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை கட்டும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதனால் கர்காடகா அரசுக்கு முயற்சிக்கு தடை விதிக்க கோரியும், தென்பெண்ணையாற்றின் நீர் பங்கீடு வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பேசுகையில், 2020ம் ஆண்டு தென்பெண்ணை ஆறு நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது. ஆனால் 2020க்கு பிறகு அந்த கூட்டம் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியது.

இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு இன்னும் எத்தனை நாட்கள் நிலுவையில் இருக்க போகிறது? நதிநீர் பங்கீடு விவகாரங்களில் அரசியலை கலக்காதீர்கள். ஏன் இதுவரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, வழக்கு விசாரணைக்கு வரும்போது மட்டும் ஏன் திடீர் நடவடிக்கை. ஒவ்வொரு முறை கால அவகாசம் கேட்கிறீர்கள். இப்படியே செய்தீர்கள் என்றால் 10ஆண்டுகள் ஆனாலும் தீர்வு கிடைக்காது.
இன்னும் எத்தனை நாளுக்கு தான் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகாரங்கள் நிலுவையிலே இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். பின்னர் இன்னும் 4 வார காலத்திற்குள் தீர்ப்பாயம் அமைத்து அதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 14 அன்று ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications