ஊழியர்களை விட 534 மடங்கு அதிகம்! வாரம் 90 மணி நேரம் வேலை பற்றி சொன்ன எல்&டி தலைவர் சம்பளத்தை பாருங்க
டெல்லி: இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி வாரம் 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறியது விவாதப்பொருளான நிலையில், எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ் என் சுப்பிரமணியன் வாரம் 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது கருத்து விமர்சனம் ஆகி வரும் நிலையில், எஸ். என் சுப்பிரமணியன் 2023-24 நிதி ஆண்டில் ஆண்டுக்கு ரூ.51 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளதாகவும், இவரது சம்பளம் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சராசரி ஊதியத்தை விட 534.57 சதவிகிதம் அதிகம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவை வளர்ந்த நாடாக்க இளைஞர்கள் பலரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்றும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி கூறியிருந்தார். உலகம் முழுவதுமே, ஊழியர்களின் வேலை நேரத்தை குறைப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வரும் நிலையில், இன்ஸ்போசிஸ் நிறுவன பேசியது விவாதப்பொருளானது.

நாராயண மூர்த்தியின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பும் தெரிவித்தனர். குறிப்பாக ஊழியர்கள் work life - balance பாதிக்கப்படும் என பேசினர். இந்த நிலையில் தான் எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ் என் சுப்பிரமணியன், "வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்த்தால் போதாது.. 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.. என்று பேசியுள்ளார்.
ரெட்டிட் இணையதளத்தில் எஸ் என் சுப்பிரமணியன் பேசும் வீடியோ வேகமாக பரவியது. அதில் பேசும் எஸ் என் சுப்பிரமணியன், "வீட்டில் இருந்து கொண்டு என்ன செய்வீர்கள்.. உங்கள் மனைவியின் முகத்தையே எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டு உங்களால் இருக்க முடியும்? அலுவலகத்திற்காக வேலை செய்யுங்கள். என்று பேசினார். மற்றொரு வீடியோவில் அவர் பேசும்போது, "முன்பு நான் சீன நபரிடம் பேசினேன். அப்போது அவர் அமெரிக்காவையே சீனா மிஞ்சிவிடும் என்றும், சீனாவில் 90 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்றார்.
எனவே தான் தொழிலாளர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை கூட எடுக்காமல் வேலை செய்யலாம். வீட்டில் குறைவான நேரத்தை செலவிட்டு அலுவலகத்தில் அதிக நேரத்தை செலவிடுங்கள். நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்து இருக்கிறேன்" என்று பேசினார்.
வார லீவ் எடுக்காமல் 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என எல் & டி நிறுவன தலைவர் எஸ்.என் சுப்பிரமணியன் கூறிய கருத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. எஸ்.என். சுப்பிரமணியன் கருத்துக்கு தொழிலதிபர்கள், பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் நிலையில், அவர் வாங்கும் ஊதியம் குறித்த விவரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
எஸ். என் சுப்பிரமணியன் 2023-24 நிதி ஆண்டில் ஆண்டுக்கு ரூ.51 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளாராம். இவர் வாங்கிய சம்பளம் அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சராசரி ஊதியத்தை விட 534.57 சதவிகிதம் அதிகமாக உள்ளதாம்.
2023-24 நிதி ஆண்டில், அடிப்படை சம்பளமாக ரூ.3.6 கோடி, கமிஷனாக 35.28 கோடி, ஓய்வூதிய பலன் களாக ரூ.10.5 கோடி என மொத்தம் 51 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்கிறார். அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மீடியன் சம்பளமாக ரூ. 9.55 லட்சமே உள்ளது என Money theory என்ற எக்ஸ் தளத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. எஸ்.என் சுப்பிரமணியன் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலைக்கு ஏன் ஆதரவாக உள்ளார் என்பது தெரிகிறதா? என கேட்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications