சீக்ரெட் செல்போன் திருடுபோய்விட்டதா? கண்டுபிடிப்பது எப்படி? வந்துவிட்டது மத்திய அரசின் இணையதளம்!
டெல்லி: பொதுமக்கள் தங்களது செல்போனை தொலைத்து விட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ அதை எளிதாக கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
செல்போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற அளவுக்கு தற்போது அந்த மின்னணு பொருள் மனித வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. தனிமையில் இருப்போர், கவலையில் இருப்போருக்கு உற்ற தோழனாகவும் இருந்து வருகிறது.

வெளிநாடுகளில் உள்ளோர் தங்கள் குடும்பத்தினரை வீடியோ காலில் பார்த்து பேச இந்த செல்போன் உதவுகிறது. இந்த செல்போன் மூலம் புகைப்படம் எடுத்தல் , மெசேஜ் அனுப்புதல், ஒருவருடன் தொடர்பு கொள்ளுதல் முதல் வங்கிக் கணக்கில் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே பணம் அனுப்புவது, பணம் செலவழிப்பது என செல்போனின் பயன்கள் அதிகம்.
இந்த செல்போனில் பலர் தங்களது வங்கிக் கணக்கு எண், நெட் பேங்கிங், போன் பே, ஜி பே குறித்த பாஸ்வேர்டுகளையும் குறித்து வைப்பர், மேலும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு குறித்த தகவல்களும் இருக்கும் என்பதால் இது ஒரு கிரென்ஷியலாக பார்க்கப்படுகிறது. இந்த செல்போன் காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பிரச்சினைதான்.
தனிப்பட்ட தகவல்களை புதுப்பிப்பது என்பது மிகுந்த சிரமமாகும். ஆனால் தொலைந்து போன செல்போனை நாமே பிளாக் செய்து கண்டுபிடிக்கும் புதிய இணையதள வசதியை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. www.ceir.gov.in என்ற இணையதளத்திற்கு போய் உங்கள் தகவல்களை கொடுக்கலாம். இதன் மூலம் உங்கள் செல்போனை கண்டுபிடிக்கலாம், பிளாக் செய்யலாம், கண்டுபிடித்த போனை அன் பிளாக் செய்யலாம்.

Central Equipment Identity Register (CEIR) என்ற இந்த இணையதளத்தில் நம் செல்போனிற்கு கொடுக்கப்பட்ட 15 இலக்க ஐஎம்இஐ எண்ணைக் கொண்டு அவற்றின் இருப்பிடத்தை எளிதாக கண்டறிய முடியும். மேற்கண்ட இணையதளத்தில் ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்து தொலைந்த போனை வேறு ஒருவர் பயன்படுத்தாத அளவிற்கு பிளாக் செய்ய வழி இருக்கிறது.
உதாரணமாக நீங்கள் ஏர்டெல் எண்ணை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்த எண் இருந்த செல்போன் தொலைந்துவிட்டு அதை காணவில்லை என சிஇஐஆரில் புகார் கொடுத்தால் இந்த புகாரானது அனைத்து சர்வீஸ் புரவைடர்களுக்கும் சென்றுவிடும். இதனால் அந்த செல்போனில் மற்றவர்கள் எந்த நெட்வொர்க்கின் சிம்மையும் பயன்படுத்த முடியாது.
ஆனால் இந்த இணையதளத்தில் செல்போன் காணாமல் போனது குறித்து புகார் கூற சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள். காணாமல் போன செல்போனின் ஐஎம்இஐ எண், செல்போன் காணாமல் போன பகுதி, காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் எண், அதன் நகல், செல்போனுடன் இணைக்கப்பட்டிருந்த சிம் கார்டு எண்ணை மீண்டும் திரும்ப பெற்று இணையதளத்தில் பதிவு செய்தால் காணாமல் போன செல்போன் எங்கிருந்தாலும் பிளாக் செய்ய முடியும் என்கிறார்கள்.

ஒரு வேளை செல்போன் கண்டுபிடிக்கப்பட்டால் அதே இணையதளத்திற்கு சென்று அன்பிளாக் செய்யவும் வழிவகை உள்ளது. காணாமல் போன சிம் நம்பரை போலவே வேறு ஒன்றை வாங்கிதான் உங்கள் செல்போனை கண்டுபிடிக்க முடியும். இந்த பிராசஸ் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என்கிறார்கள். இதுவரை இந்த இணையதளம் மூலம் 4.91 லட்சம் செல்போன்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளன என்றும் 2.45 லட்சம் செல்போன்கள் கிடைத்துள்ளதாகவும் டேஷ்போர்டில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சஞ்சார் சாத்தி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புதிய தொழில்நுட்ப போர்ட்டலை உலக தொலைத் தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை முன்னிட்டு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மே 17 அறிமுகப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications