நரேந்திர மோடி மீண்டும் பிரதமரான நிலையில் முதல் வெளிநாட்டு பயணம் .. முதல் பயணம் எங்கு தெரியுமா?
டெல்லி: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜூன் 14-ல் பிரதமர் மோடி இத்தாலி செல்கிறார். ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் வரும் 13-ம் தேதி தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பாஜக இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.இந்த கூட்டணி ஆட்சியில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் ஆகியவை முக்கியமான பங்கு வகிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக நேற்று பிரதமராக பதவியேற்றார். இதில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், சுரேஷ் கோபி, எல் முருகன் உள்பட மொத்தம் 71 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

பண்டிதர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு நாட்டில் தொடர்ந்து 3வது முறையாக பிரதமராகியுள்ள தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 3-வது முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். ஜி 7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி செல்கிறார்.
ஜி7 அமைப்பை பொறுத்தவரை உலகின் மிகவும் அதிகாரம் மிக்க அமைப்புகளில் ஒன்று. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்
இந்த மாநாட்டை இத்தாலி அரசு நடத்துகிறது. இத்தாலி அரசு சார்பில் இந்தியா, சவுதி அரேபியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க வருமாறு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் 14-ம் தேதி ஒரு நாள் பயணமாக இத்தாலி செல்கிறார்.
இந்த மாநாட்டில் உக்ரைன் போர், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது. பிரதமர் மோடி பொருளாதார வளர்ச்சி குறித்து ஜி7 உச்சி மாநாட்டில் பேசக்கூடும் என தெரிகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்கு பிரதமர் மோடி செல்லவிருக்கும் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications