ராம்தேவ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?..நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று கருப்பு தினம் அனுசரிப்பு
டெல்லி: டாக்டர்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று கருப்பு தினம் அனுசரித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் பாடாய்படுத்தி வரும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதில் டாக்டர்களின் பங்களிப்பை பெரும் வார்த்தையால் விவரித்து விட முடியாது.
தங்களின் உயிரை பணயம் வைத்து மக்களின் உயிரை காப்பற்றி வரும் டாக்டர்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து இருந்தார் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ்.

பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து
''நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது. இது தோல்வியடைந்த மருத்துவ முறை. கொரோனாவை விட அலோபதி மருந்துகளை உட்கொண்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர். ரெமிடிசிவர் என இந்திய மருந்து கட்டுப்பாடு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் ஒன்று கூட வேலை செய்யவில்லை' என்று பகீர் குற்றச்சாட்டுகளை கடந்த வாரம் கூறி இருந்தார் பாபா ராம்தேவ்.

பிரதமருக்கு கடிதம்
இதனை தொடர்ந்து பாபா ராம்தேவ்வுக்கு எதிராக டாக்டர்கள் கொதித்தெழுந்தனர். இந்த கருத்து தொடர்பாக ராம்தேவ்க்கு நோட்டீஸ் அனுப்பிய இந்திய மருத்துவர்கள் சங்கம் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கும் கடிதம் அனுப்பினார்கள். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், டாக்டர்கள் சங்கத்தினர் ராம்தேவ்க்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை மனு அனுப்பினார்கள்.

நடவடிக்கை இல்லை
ஆனால் பாபா ராம்தேவ் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே தான் கூறிய கருத்துக்கு டுவிட்டரில் வருத்தம் தெரிவித்து இருந்தார் ராம்தேவ். இந்த நிலையில் ராம்தேவ் கருத்துக்கு எதிராக இன்று நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். உணர்ச்சியற்ற மற்றும் கேவலமான கருத்துக்களுக்கு பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற திறந்த பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று பல்வேறு மருத்துவ சங்கங்கள் கோரியுள்ளன.

கருப்பு தினம் அனுசரிப்பு
இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த குடியுரிமை டாக்டர்கள் சங்கம் (ஃபோர்டா) டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராம்தேவின் கருத்துக்களுக்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்த பிறகும் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுகாதார சேவைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் ஜூன் 1-ம் தேதி(இன்று) பணியிடத்தில் நாடு தழுவிய கருப்பு நாள் போராட்டத்தை அறிவிக்கிறோம்.ராம்தேவிடம் இருந்து நிபந்தனையற்ற திறந்த பொது மன்னிப்பு கோர வேண்டும் அல்லது தொற்றுநோய் நோய்கள் சட்டம், 1897 இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications