சீன எல்லை பிரச்சனை: அன்று மோடி சொன்னாரே.. இன்னும் அதைதான் கடைபிடிக்கிறீர்களா? - ப.சிதம்பரம் கேள்வி
டெல்லி: வெளிநாட்டு ராணுவ வீரர்கள் யாரும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி சொன்னதைதான் இந்திய அரசு இன்னும் கடைபிடிக்கின்றதா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதிக்குள் ஊடுருவிய சீன படை வீரர்கள், ஆக்கிரமிக்க முயன்றதால் மோதல் ஏற்பட்டது.
இரு நாட்டு வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த நிலையில், லடாக் எல்லையில் வீரர்களிடையே மோதலை தவிர்க்க பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன.

பேச்சுவார்த்தைகள்
கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 16 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. அதன் அடிப்படையில் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டு இருந்த இருநாட்டு படைகள் திரும்பப் பெறப்பட்டன. கடந்த மார்ச் மாதம் இருநாடுகளிடையே 15 வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய எல்லைக்கு உட்பட்ட சுஷுல் - மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

16 வது சுற்று
மேற்குத் துறையில் பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மையை தற்காலிகமாக உறுதிபடுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். மீதம் உள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் இருதரப்பும் ஏற்கக்கூடிய தீர்வை எட்ட ராணுவ மற்றும் ராஜாங்க வழிகளில் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த அவர்கள் சம்மதித்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை 17 ஆம் தேதி சுஷுல்ன்- மோல்டோ புள்ளியில் இருநாட்டு ராணுவ அதிகாரிகளிடையே 16 வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா தரப்பில் 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா இதில் பங்கேற்றார்.

எட்டப்படாத முடிவு
இந்த 16 வது சுற்றுப்பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடுகளும் எட்டப்படவில்லை என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில், "இந்தியா சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற 16 வது சுற்று பேச்சுவார்த்தை, எதிர்பார்த்தபடி உடன்பாடு இல்லாமல் முடிந்துள்ளது. ஹாட் ஸ்பிரிங்ஸ் விவகாரத்தில் சீனா எந்த முடிவுக்கும் வரவில்லை.

பிரதமர் அறிக்கை
டெம்சோக் மற்றும் டெப்சாங் பற்றி சீனா விவாதிப்பதற்கு கூட தயாராக இல்லை. இந்தியா சீனா இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கும் அதே நேரம், சீன ஊடகங்கள் பேச்சுவார்த்தை பற்றி குறிப்பிடவே இல்லை. பிரதமர், இந்திய எல்லைக்குள் வெளிநாட்டு வீரர்கள் யாரும் அத்துமீறி நுழையவில்லை என்றும் இந்திய எல்லையில் வெளிநாட்டு வீரர்கள் இல்லை எனவும் வெளியிட்ட அறிக்கையை இந்திய அரசு இன்னும் கடைப்பிடிக்கிறதா?" என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications