தூர்தர்ஷனின் பழம்பெரும் செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயர் காலமானார்.. யார் இவர்? இவ்வளவு பெருமையா?
டெல்லி: எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் தனது தனித்துவ குரலால் தூர்தர்ஷனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி தொகுப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற கீதாஞ்சலி ஐயர் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மெல்ல மெல்ல வீடுகளுக்குள் டிவிகள் நுழைய தொடங்கினர். நாட்டு நடப்புகளை இருந்த இடத்தில் இருந்த படியே அறிந்து கொள்ளும் வகையில் அரசு சார்பில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.

நிறுத்தி, நிதானமாக, பதற்றத்தை கிளப்பாத வகையில் ஒரு தகவலை செய்தியாக மக்களின் காதுகளுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் எளிமை மொழியில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி முக்கிய தகவல்களை கொண்டு சேர்த்தது. இதனால் தான் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்கள் இன்றளவும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராகவும், விரும்பிய பாடலை மக்கள் கேட்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளராகவும் இவர் பணியாற்றினார். 1971 ல் தூர்தர்ஷன் ஆங்கில தொலைக்காட்சியில் பணியாற்ற தொடங்கிய கீதாஞ்சலி ஐயர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் செயல்பட்டார். இவருக்கென தனி ஆடியன்ஸ் உண்டு.
இந்நிலையில் தான் கீதாஞ்சலி ஐயர் இன்று காலமானார். இவருக்கு வயது 71. கீதாஞ்சலி ஐயர் தனது பணிக்காலத்தில் 4 முறை சிறந்த தொகுப்பாளர் விருதை பெற்று அசத்தினார். இவர் செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் விதத்துக்கு இதுவே சான்றாகும். காலமான கீதாஞ்சலி ஐயருக்கு செய்தி வாசிப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர் 1978 ல் ஆல் இந்தியா ரேடியோ தனியாக பிரிந்தபோதும் கூட தூர்தர்ஷனிலேய இவர் தொடர்ந்து பணியாற்றி வந்தார். இதன்மூலம் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் தான் கீதாஞ்சலி ஐயர். இவர் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். குறிப்பாக கூற வேண்டும் என்றால் கடந்த 1989 ம் ஆண்டில் சிறந்த பணி, சாதனை, பங்களிப்புக்காக அவருக்கு இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருதை வென்றார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள லொரேட்டோ கல்லூரியில் இளங்கலையில் ஆங்கிலப்படிப்பை முடித்த இவர் தேசிய நாடகப்பள்ளியில் டிப்ளேமாவும் முடித்தார். தூர்தர்ஷனிலம் பணி ஓய்வுக்கு பிறகு சிஐஐ எனும் இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆலோசகராகவும் பணியாற்றியதோடு, ‛கந்தான்' எனும் தொடரிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications