அதிமுக சட்டவிதிகளில் திருத்தம்.. ரத்து செய்யக் கோரிய கே.சி. பழனிச்சாமி மனு தள்ளுபடி
டெல்லி: அதிமுக சட்டவிதிகளில் மேற்கொண்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரிய கே.சி.பழனிச்சாமியின் மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவிடம் வாலண்டரியாக அதிமுக மூத்த நிர்வாகிகள் ஒப்படைத்தனர். இதை அவர் முதல்வராக காய்களை நகர்த்திய போது தர்மயுத்தத்தை ஓபிஎஸ் தொடங்கினார். இதனால் அதிமுக 2-ஆக பிரிந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தது. பின்னர் அக்கட்சியின் செயற்குழு கூடி இனி அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியே ஒன்று இல்லை என கூறி அப்பதவியை ரத்து செய்தது.
பொதுச் செயலாளருக்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு அப்பதவிகளில் முறையே ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் அமர்ந்தனர்.
இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியான கே.சி. பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில் அதிமுக பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான் விதி.
மேலும் அதிமுகவின் சட்டவிதிகளில் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் மாற்றங்களை கொண்டு வந்தனர். இதை ரத்து செய்து, கட்சியில் இருந்து நீக்கியவர்கள் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து சட்டவிதி திருத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட தேவையில்லை என விளக்கம் அளித்தது. இதையடுத்து கே.சி.பழனிச்சாமி மனுவை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது.












Click it and Unblock the Notifications