டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ல் தேர்தல்.. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.. ஆரம்பித்தது அரசியல் ஜுரம்
டெல்லி: டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் வரும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் சட்டசபை தேர்தல் நடத்த 4 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர், காவல் துறை ஆணையருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி 1 கோடியே 46 லட்சத்து 92 வாக்காள்ர்கள் உள்ளனர். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
இந்த தேர்தலில் 90 ஆயிரம் காவலர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர். மூத்த வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் வாகன வசதி செய்து தரப்படும். சட்டசபை தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த ஆணையம் உறுதியாக உள்ளது.13,750 மையங்களில் வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.
டெல்லியில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 14-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 21-ஆம் தேதி முடிவடைகிரது. வேட்புமனு பரிசீலனை ஜன 22-இல் நடைபெறுகிறது.
டெல்லி சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும். 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. என்றார்.