விசாரணை நடக்கும்போதே அவசரமாக டெல்லிக்கு ஓடிய அமலாக்கத்துறை.. ‘கேவியட் மனு’ பின்னணி! இதான் மேட்டரா?
டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு சென்னை ஐகோர்ட்டில் மூன்றாவது நீதிபதி முன்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவசர அவசரமாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது அமலாக்கத்துறை.
சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது மருத்துவமனையில் இருந்து வருகிறார்.

ஹேபியஸ் கார்ப்பஸ்: இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார். அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். நீதிபதி ஜெ.நிஷா பானு, செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் மனு விசாரணக்கு உகந்தது. அதனால் ஆட்கொணர்வு மனு ஏற்கப்படுகிறது. செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும். செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது எனத் தீர்ப்பளித்தார்.
மாறுபட்ட தீர்ப்புகள்: அதேசமயம், நீதிபதி பரத சக்கரவர்த்தி, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டப் பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது. அதனால் மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். 2 நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா உத்தரவிட்டார். கடந்த ஜூலை 6ஆம் தேதி இந்த வழக்கு 3வது நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, செவ்வாய்க்கிழமைக்கு வழக்கை ஒத்திவைக்க என்.ஆர்.இளங்கோ கோரிக்கை வைத்தார். விசாரணை தேதி அடுத்த நாள் முடிவு செய்யப்படும் என நீதிபதி அறிவித்தார்.
மூன்றாவது நீதிபதி விசாரணை: இதையடுத்து செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் கடந்த 7ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்படி இன்று வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மேகலா தரப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை வைத்து வருகிறார்.
கேவியட் பெட்டிஷன்: இந்நிலையில் அமலாக்கத்துறை, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. ஜூலை 7ஆம் தேதி உத்தரவை மேற்கோள் காட்டி, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது அமலாக்கத்துறை.
செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அல்லது இடையீட்டு மனு தாக்கல் செய்தால் தங்கள் தரப்பின் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என அமலாக்கத்துறையினர் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பின்னணி என்ன?: உயர் நீதிமன்ற மூன்றாவது நீதிபதி விசாரணை கடந்த ஜூலை 7ஆம் தேதி ஒத்திவைக்க மேகலா தரப்பு வழக்கறிஞர் கோரியதே மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராவதற்காகத்தான். அதன்படி இன்று கபில் சிபல் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகி வாதங்களை எடுத்து வைத்து வருகிறார். தீர்ப்பு பாதகமாக அமைந்தால், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்க திட்டமிட்டுள்ளது செந்தில் பாலாஜி தரப்பு. உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் வாதாடுவார் என்பதற்காக அவரை ஐகோர்ட்டிலேயே களமிறக்கியுள்ளனர்.
செந்தில் பாலாஜி தரப்பின் இந்த திட்டம் காரணமாகவே, அமலாக்கத்துறை இன்றே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆக, மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு எப்படி வந்தாலும், உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு செல்லவுள்ளது.












Click it and Unblock the Notifications