நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை- காங். போராட்டம்
டெல்லி: டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தலைமை அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையைக் கண்டித்து டெல்லியில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
Recommended Video
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிகை. நாடு விடுதலைக்கு முன்னரே அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நேரு தொடங்கி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்புடன் இந்த பத்திரிகையை நேரு தொடங்கினார். இப்பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சி நிதி வழங்கியது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு
2010-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. அதன் பங்குதாரர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. அப்போது அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டது. இக்கடனுக்கு மாற்றாக அந்நிறுவனப் பங்குகள் சோனியா, ராகுல் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ஏற்கனவே வருமான வரி துறை வழக்குப் பதிவு செய்து அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

சோனியா, ராகுலிடம் விசாரணை
இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு பங்குகள் கை மாறியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறி அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் முதலில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விசாரிக்கப்பட்டார். பின்னர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி விசாரிக்கப்பட்டார். ராகுல், சோனியாவிடம் விசாரணை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி கைதாகினர்.

நாடு தழுவிய போராட்டம்
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சோனியா, ராகுல் காந்தியை பழிவாங்கும் வகையில் விசாரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியது. வருமான வரித்துறை சார்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அமலாக்கப் பிரிவு விசாரணை உள்நோக்கம் கொண்டது என்பது காங்கிரஸ் நிலைப்பாடு. இதனால் அமலாக்கப் பிரிவின் விசாரணைக்கு எதிராக உக்கிரமான போராட்டங்களை காங்கிரஸ் நடத்தியது.

டெல்லியில் ரெய்டு
இந்நிலையில் டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் உட்படட 10 இடங்களில் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே டெல்லி நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனைகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications