ப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா நிதி மோசடி வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தின், முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கே.வி.கே.பெருமாளை விசாரணைக்கு ஆஜராக அமலாக்க இயக்குநரகம் (இ.டி) அழைப்பு விடுத்துள்ளது.
செப்டம்பர் 18 ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, பெருமாளுக்கு அமலாக்கப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளதாம். இதற்கு முன்னர் இரண்டு முறை அமலாக்க பிரிவு அவரிடம் விசாரித்துள்ளது நினைவிருக்கலாம்.

"ஐ.என்.எக்ஸ் மீடியா விசாரணைக்கு உதவக்கூடிய முக்கியமான தகவல்களை கே.வி.கே. பெருமாள் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால்தான் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்," என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே வழக்கிற்காக கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், மத்திய அரசின் விருப்பத்திற்காக, சிபிஐயால் தான், கைது செய்யப்பட்டதாகவும், தனது மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.












Click it and Unblock the Notifications