அதிமுக அடிமைக் கட்சி அல்ல! அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்த தகராறும் இல்லை- எடப்பாடி பழனிசாமி
டெல்லி: எங்களுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் அவருடன் என்ன பேசினார் என்பது குறித்து டெல்லியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை. அதிமுக- பாஜக கூட்டணி தொடர்கிறது. எங்கள் கூட்டணிக்குள் தகராறு, பிளவு என திட்டமிட்டு அதிமுக-பாஜகவை பிரிக்க சதி செய்கிறார்கள்.
அடிமை இல்லை: சம்பிரதாயப்பட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தோம். எல்லாத்தையும் அப்படியே கேட்டுவிட்டு செல்வதற்கு அதிமுக அடிமைக் கட்சி இல்லை. அதிமுகவும் இரட்டை இலை சின்னமும் எங்கள் பக்கம் உள்ளது. இதை தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது.
ரூ 30 ஆயிரம் கோடி ஊழல்: ஓபிஎஸ் மாநாடு குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். ஒற்றுமையாக செயல்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை வெற்றி பெற செய்வோம். ரூ 30 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக ஆடியோ விவகாரத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே கூறியுள்ளார். அவரே கூறிவிட்டு தற்போது அந்த ஆடியோ புனையப்பட்டது என்றால் எப்படி? ஆடியோ விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
முதல்வர் மவுனம் ஏன்: அமைச்சர் அமித்ஷாவும் அந்த ஆடியோவை கேட்டிருந்தாராம். அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இதுவரை பேசாதது ஏன், ஆடியோ விவகாரம் குறித்து விளக்கம் கொடுக்காததால்தான் எங்களுக்கு அந்த ஆடியோ மீது சந்தேகம் ஏற்படுகிறது.
டெண்டரில் ஊழல் இல்லை: ஆடியோ விவகாரத்தை சாதாரணமாகவும் பொருட்படுத்தாமல் இருக்கக் கூடாது. அதிமுக ஆட்சியில் டெண்டரில் ஊழல் நடந்ததாக சிஏஜி அறிக்கையில் சொல்லவில்லை. எந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டது, எந்த நிதி பயன்படுத்தவில்லை உள்ளிட்டவை குறித்துதான் வெளியிட்டுள்ளது. அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை தவிர மற்றவர்களை கட்சிக்குள் இணைய வரவேற்கிறோம்.
பொதுக் குழு: ஓபிஎஸ்ஸுக்கு ஒருங்கிணைப்பாளர் பணியை பொதுக்குழுதான் கொடுத்தது. எனக்கு பொதுச் செயலாளர் பதவியை கொடுத்ததும் பொதுக் குழுதான். ஆக ! பொதுக் குழு தமக்கு பதவி கொடுத்தால் சிறந்தது என்றும் தனக்கு கொடுக்காவிட்டால் தவறு இருப்பதாகவும் ஓபிஎஸ் கூறி வருகிறார். திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார்.
கொடநாடு எஸ்டேட்: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை முயற்சி அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில்தான் கொலையாளிகளை கைது செய்தோம், ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள் கொலையாளிகளுக்கு ஜாமீன் எடுத்து அவர்களை வெளியே விட்டுவிட்டார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்த போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டன. அந்த வகையில் இந்த முறை நிறைய தொகுதிகளை பாஜக ஒதுக்க கேட்டிருக்கும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications