சரத்பவார் வீட்டில் 8 எதிர்க்கட்சிகள் அவசர மீட்டிங்.. காங்கிரஸ் ஆப்சென்ட்.. கூட்டத்தில் பேசியது என்ன?
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் 8 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின. ஆனால் இதில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103
இந்த தேர்தல்களில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் புதிய அணியை உருவாக்குவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தொடர்ந்து முயன்று வருகிறார்.
சரத்பவார் முயற்சி
இது தொடர்பாக ஒரு திட்டத்தை கையில் வைத்துள்ள சரத்பவார், மேற்கு வங்கம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், திமுக வெற்றிக்கு உதவிய பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடந்தினார். அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறிய பிரசாந்த் கிஷோருடன் சரத்பவார் நடத்திய ஆலோசனை பரபரப்பாக பேசப்பட்டது.
8 கட்சிகள் ஆலோசனை
இந்த ஆலோசனையில் எடுத்த முடிவின்படி எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு சரத் பவார் அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி அவரது வீட்டில் 8 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒருவரும், தேசிய மாநாட்டுத் தலைவர் உமர் அப்துல்லா, ஆர்.எல்.டி.யின் ஜெயந்த் சவுத்ரி, சமாஜ்வாடி கட்சியின் கன்ஷ்யம் திவாரி; ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சுஷில் குப்தா, சிபிஐயின் பினாய் விஸ்வாம் மற்றும் சிபிஎம்மின் நிலோட்பால் பாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை அமைக்க சரத்பவார் முயற்சிப்பதாகவும், இதனால்தான் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் பரவின. கூட்டம் முடிந்ததும் இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மஜீத் மேமனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், '' இந்த கூட்டத்துக்கு யஷ்வந்த் சின்ஹாதான் அழைப்பு விடுத்தார். சரத் பவார் அல்ல, இது ஒரு அரசியல் சந்திப்பு அல்ல.
காங்கிரசுக்கு அழைப்பு
இந்த சந்திப்பு காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக நடந்ததாக பேச்சுக்கள் உலா வருகின்றன. இது உண்மை அல்ல. பாகுபாடு இல்லை. நாங்கள் ஒத்த எண்ணம் கொண்டவர்கள் அனைவரையும் அழைத்தோம். காங்கிரசுக்கும் அழைப்பு விடுத்தோம். நான் விவேக் தன்ஹா, மனிஷ் திவாரி, அபிஷேக் சிங்வி, சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை.
அரசியல் கூட்டம் அல்ல
''இது ஒரு அரசியல் கூட்டம் அல்ல. ஒத்த எண்ணம் கொண்ட நாங்கள் கொரோனா பிரச்சினை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம்'' என்று சிபி.எம்.மின் நிலோட்பால் பாசு நிருபர்களிடம் கூறினார். சரத்பவார் முயற்சி வெற்றி பெறுமா? பாஜகவுக்கு எதிரான 3-வது அணி அமையுமா? அந்த அணி மோதும் அளவுக்கு வலுவாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.