பரபர மகாராஷ்டிரா.. அப்செட்டில் இருக்கிறாராம் ஏக்நாத் ஷிண்டே.. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தகவல்
டெல்லி: மகாராஷ்டிரா முதல்வர் பதவியை இழப்பதால் இடைக்கால முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடும் அதிருப்தியில் இருக்கிறார்; தேவேந்திர பட்னாவிஸ் முன்னர் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டது போல ஏக்நாத் ஷிண்டே தற்போது துணை முதல்வர் பதவியை ஏற்க வேண்டும்; துணை முதல்வராக விருப்பம் இல்லை எனில் மத்திய அமைச்சராக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்று 10 நாட்களாகியும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சியை அமைக்க முடியவில்லை. மகாராஷ்டிரா தேர்தலில் மகாயுதி கூட்டணி வெல்வதற்கு ஏக்நாத் ஷிண்டே அரசின் செயல்பாடுகளும் மக்கள் நலத் திட்டங்களும்தான் காரணம்; ஏக்நாத் ஷிண்டேவை முன்வைத்தே மகாயுதி கூட்டணி வெற்றியும் பெற்றது; அதனால் ஏக்நாத் ஷிண்டேவையே முதல்வராக நீடிக்கச் செய்ய வேண்டும் என்பது சிவசேனா நிலைப்பாடு.

ஆனால் பாஜகவோ, தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்பதில் மாற்றம் இல்லை; ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி தருவோம் என்றது. இதில் ஏக்நாத் ஷிண்டே கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு ஷிண்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க ஏக்நாத் ஷிண்டே முன்வந்தார்.
இருப்பினும் மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி பிளஸ் உள்துறை இலாகா கேட்டு வருகிறார் ஏக்நாத் ஷிண்டே. இதனை பாஜக மேலிடம் ஏற்க மறுக்கிறது. இதனால் புதிய ஆட்சி அமைப்பதற்கு ஏக்நாத் ஷிண்டே ஒத்துழைப்பு தராமல் இழுத்தடித்து வருகிறார். தற்போது உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார் ஏக்நாத் ஷிண்டே. இதனால் ஏக்நாத் ஷிண்டேவை பாஜக தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் நாளை மறுநாள் புதிய அரசு பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் முதல்வர் , துணை முதல்வர், அமைச்சர்கள் பதவி குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் குழப்பமான நிலைமை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, முதல்வர் பதவியை இழந்ததால் ஏக்நாத் ஷிண்டே தற்போது அதிருப்தியில் இருக்கிறார். முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுக்கு கீழ் துணை முதல்வராக இருந்தார். அதே பார்முலாவை ஏக்நாத் ஷிண்டேவும் பின்பற்ற வேண்டும். அப்படி விருப்பம் இல்லை எனில் மத்திய அரசில் ஏக்நாத் ஷிண்டே இணைந்து கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications