Bihar SIR: நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரத்தை.. 4 நாட்களில் வெளியிட வேண்டும்! உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பீகாரில் சார் நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவதுபீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை, நீக்கத்திற்கான காரணங்களுடன் 4 நாட்களில் தேர்தல் ஆணைய இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
பீகாரில் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்குத் தேர்தல் ஆணையம் சார் நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதைக் கடுமையாக எதிர்த்துள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இதை விமர்சித்து வருகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மேலும், இந்த சார் நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். முன்னதாக வழக்கு விசாரணையில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்பது போல தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இது தொடர்பான வழக்கு கடந்த இரண்டு நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இதில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீக்கப்பட்டோரின் விவரங்களை 4 நாட்களில் இணையத்தில் வெளியிட வேண்டும் என்றும் நீக்கப்பட்ட காரணத்தையும் தெளிவாகக் குறிப்பிட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அனைத்து வாக்காளரும் இதை அணுகும் வகையில் இந்த பட்டியல் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஆதார்
மேலும், தவறாக நீக்கப்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையின் நகலுடன் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்புச் சீர்திருத்த நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஆதாரை ஆவணமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மனுதாரர்களும் ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறுகையில், "மொத்தம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.. 22 லட்சம் பேர் இறந்திருந்தால், பூத் மட்டத்தில் ஏன் இந்த விவரத்தை வெளியிடவில்லை? குடிமக்களின் உரிமைகள் அரசியல் கட்சிகளைச் சார்ந்து இருப்பதை நாங்கள் விரும்பவில்லை.
இணையத்தில் வெளியிட வேண்டும்
தேர்தல் ஆணையம் இடைக்கால நடவடிக்கையாக வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படாத 65 லட்சம் பேரின் விவரங்களை இணையத்தில் வெளியிட ஒப்புக்கொண்டுள்ளன. நீக்கப்பட்டோர் ஆதார் அட்டையின் நகலுடன் தங்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம். கூடுதலாக, 65 லட்சம் வாக்காளர்களின் பூத் வாரியான பட்டியல் அனைத்துப் பஞ்சாயத்துப் பவன்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகைகளிலும் ஒட்ட வேண்டும். இதன் மூலம் மக்கள் பட்டியலை நேரடியாக அணுக முடியும்" என்றார்.
முன்னதாக வழக்கு விசாரணையின்போது சார் நடவடிக்கையில் எத்தனை வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன என்று நீதிபதி ஜோய்மால்யா பாக்சி கேள்வி எழுப்பினார். அதற்குத் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, "65 லட்சம் பேர் இல்லை, 22 லட்சம் பேர் உயிரிழந்ததால் நீக்கப்பட்டனர். அதேநேரம் உயிருடன் இருப்பவர்களில் மரணமடைந்துவிட்டதாக நீக்கப்பட்டிருந்தால் அவர்கள் தேர்தல் அதிகாரிகளை அணுகி இதைச் சரிசெய்யலாம்" என்றார்.
வெளிப்படைத்தன்மை தேவை
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "நாங்கள் கேட்பது அதிக வெளிப்படைத்தன்மை. முழு தகவல்களையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். மக்கள் தேர்தல் ஆணைய இணையதளங்களுக்குச் சென்று தங்கள் பெயர்களை உள்ளதா என்பதைச் சரிபார்க்கும் வகையில் இருக்க வேண்டும். நான் இந்த இணையதளத்திற்குச் சென்றால், எனது பெயர் ஈஸியாக செக் செய்யும்படி இருக்க வேண்டும். இந்தப் பட்டியல் வாக்காளர் அடையாள எண்களைப் பயன்படுத்தித் தேடக்கூடிய வகையில் இருக்க வேண்டும்" என்று கூறியனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications