அதிரடி மாற்றம்.. இனி 17 வயதிலேயே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் - 2K கிட்ஸ் ரெடியா?
டெல்லி: 18 வயது பூர்த்தியானவர்களே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விதியை மாற்றி தற்போது 17 வயது நிரம்பியவர்களே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் 18 வயது பூர்த்தியான குடிமக்கள் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள்.
அதன் அடிப்படையில் ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன் 18 வயது பூர்த்தியாகி இருந்தால் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது.

இளம் வாக்காளர்கள்
ஆனால், பலர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவே தவறிவிடுவதால் இளம் வாக்காளர்களின் வாக்குகள் தவறும் நிலை ஏற்படுகிறது. கடைசி நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதாலும், தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபடும் வாய்ப்புகள் உள்ளன.

அதுரடி மாற்றம்
இதனை கருத்தில் கொண்டே இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியான மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது. இதுகுறித்து இன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இனி 18 வயது வரை வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், 17 வயதிலேயே வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.

2K கிட்ஸ் ரெடியா?
17 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தால், அவர்களுக்கு 18 வயது பூர்த்தியானவுடன் வாக்காளர் பட்டியலில் உடனடியாக பெயர் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

நம்பிக்கை
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து தேர்தல் ஆணைய இணையதளம், விண்ணப்ப படிவங்களில் மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு விண்ணப்பிக்கும் நடைமுறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்தடுத்த தேர்தல்களில் இளம் வாக்காளர்கள் பெயர்கள் விடுபடாமல் அவர்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications