அருணாசல பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்.. தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு
டெல்லி: அருணாசல பிரதேசம், சிக்கிமில் 2 நாட்கள் முன்பே அதாவது ஜூன் 2 ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்காக நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலுடன் அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிஷா, ஆந்திர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. லோக்சபா மற்றும் 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிமில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2 ஆம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அருணாசல பிரதேசம், சிக்கிமில் 2 நாட்கள் முன்பே அதாவது ஜூன் 2 ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிமில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கும் சட்டபேரவைக்கும் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2 ஆம் தேதி முடிவடைகிறது. எனவே, தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் தேதி ஜூன் 4 ஆம் தேதியில் இருந்து 2 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் முன்பு அறிவித்தது போலவே 4 ஆம் தேதியே எண்ணப்படும் எனவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறுகையில், "7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டின் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. விளவங்கோடு சட்டமன்றம் தொகுதிக்கும் அன்றே தேர்தல் நடக்கிறது.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கிறது. அருணாசல பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஆந்திரா, சண்டிகர், டெல்லி, குஜராத், இமாசல பிரதெசம், ஹரியானா, கேரளா, லட்சத்தீவு, லடாக், மிசோரம், மேகலாயா, நாகலாந்து, புதுவை, சிக்கிம், தமிழ்நாடு, பஞ்சாப், தெலுங்கனா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
சத்தீஷ்கர், அசாம் ஆகிய மாநிலங்களில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 4 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 5 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
லோக்சபா தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக இருக்கிறோம். தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம். உலகமே இந்தியாவின் தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. திருவிழா போல தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம். வெளிப்படையான நியாயமான தேர்தலை நடத்துவதில் ஆணையம் உறுதியாக உள்ளது. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பும் பட்சத்தில் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபைகளின் பதவி காலம் ஜூனில் முடிகிறது. பாரபட்சமற்ற தேர்தலை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. 1.5 கோடி அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளார்கள். என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications