Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக வாக்காளர் பட்டியலில் வரும் மேஜர் மாற்றம்.. எல்லா மாநிலங்களிலும் லிஸ்ட் போடும் தேர்தல் ஆணையம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (Special Intensive Revision - SIR) நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் இதை எதிர்த்து வழக்கும் கூட தொடர்ந்திருந்தனர். இருப்பினும், இந்தச் சர்ச்சை ஓய்வதற்குள்ளேயே நாடு முழுவதும் இந்த நடைமுறையைச் செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் திடீரென அங்குச் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு இந்தச் செயல்முறை நடப்பதால் இது சர்ச்சையானது. அங்குள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளும் இதை எதிர்த்தனர்.

Election Commission pan-India voter list revision Special Intensive Revision Bihar SIR electoral rolls illegal migrants Supreme Court ruling

நீதிமன்றத்தில் வழக்கு

சுப்ரீம் கோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாததால், தகுதிவாய்ந்த குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிபோகும் என்று கூறி, எதிர்க்கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் இந்தச் சிறப்புத் திருத்தத்திற்கு எதிராக மனுத் தாக்கல் செய்திருந்தன.

இருப்பினும், இந்தச் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாகக் கூறிய சுப்ரீம் கோர்ட், இந்த நடைமுறையைத் தொடரவும் அனுமதி அளித்தது. எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், சுப்ரீம் கோர்ட் அனுமதியால் தேர்தல் ஆணையம் இதைத் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளது.

அமித் ஷா திட்டவட்டம்

இந்த நடைமுறையால் வாக்காளர் உரிமை பறிபோவதாக எதிர்க்கட்சிகள் சாடினர். இருப்பினும், இதை மறுத்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்த நடைமுறையில் யாருக்காவது ஆட்சேபணை இருந்தால், அவர்கள் தேர்தல் ஆணையத்தை அணுக வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் இப்போது புதிதாக நடக்கவில்லை. இது 1991ம் ஆண்டும் நடந்தது. மேலும், இது பீகாரில் மட்டும் நடக்கவில்லை. நாடு முழுவதும் நடக்கும் என்று நினைக்கிறேன். இந்த விஷயம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது" என்றார்.

எதிர்க்கட்சிகள் குறித்துப் பேசிய அமித் ஷா, "தேர்தல் ஆணையம் எதைச் செய்தாலும் அவர்கள் எதிர்ப்பார்கள். தேர்தலில் தோல்வியடைந்ததை நியாயப்படுத்த அவர்கள் இதுபோல பொய்யான கற்பனையான காரணங்களைக் கூறுகிறார்கள். உதாரணமாகச் சமீபத்தில் அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களே தோல்விக்குக் காரணம் என்றனர். இப்போது இதைச் சொல்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

தேர்தல் ஆணையம்

இதற்கிடையே நாடு முழுக்க உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் புதிய அறிவுறுத்தலைக் கொடுத்துள்ளது. அதாவது 2026 ஜனவரி 1ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்புத் திருத்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது, அன்றைய தினம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். சில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே இதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டனர்.

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்கள்

நாடு முழுக்க இந்தச் சிறப்பு சீர்திருத்த நடவடிக்கையை எடுப்பது குறித்து வரும் 28ம் தேதிக்குப் பிறகு தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அன்றைய தினம் தான் பீகார் சிறப்புத் திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் தேர்தல் நடப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+