நந்திகிராம் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடியாம்...கோர்ட்டுக்கு போகிறார் மம்தா
டெல்லி : தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மேற்குவங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி கடைசி வரை போராடி தோல்வி அடைந்துள்ளார்.
மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், அவருக்கும் பாஜக.,வின் சுவேந்து அதிகாரிக்கும் கடும் போட்டி நிலவியது. காலையில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல், மாலை வரை நடந்த போராட்டத்திற்கு பிறகு, இறுதியாக 1736 ஓட்டு வித்தியாசத்தில் அதிகாரி வெற்றி பெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதனை ஏற்க மறுத்த திரிணாமுல் காங்கிரஸ், மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் திரிணாமுல் காங்கிரசின் கோரிக்கையை ஏற்க தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. எவ்வளவு முயன்றும் தேர்தல் கமிஷன் பிடிவாதமாக மறுத்து விட்டது.
இதனால் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள மம்தா பார்னஜி, இதனை எதிர்த்து தான் கோர்ட்டில் முறையிட உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் முதலில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா கூறுகையில், நந்திகிராம் மக்கள் எதை தீர்ப்பாக தந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன். மிகப் பெரிய வெற்றியை பெற நந்திகிராமை தியாகம் செய்கிறேன். ஒரு தொகுதியை இழந்தாலும் நாங்கள் மாநிலத்தையே வென்றுள்ளோம் என்றார்.
சிறிது நேரத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த போது, நான் கோர்ட்டிற்கு செல்ல உள்ளேன். இதில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக எனக்கு தெரிய வந்துள்ளது என்றார். மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 210 க்கும் அதிகமான தொகதிகளில் வெற்றி பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications