வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாகிறது!
டெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளில் இந்திய தேர்தல் ஆணையம் இறங்கி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையமானது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்த சுற்றறிக்கையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் கடந்த வாரம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வழங்கிய அறிவுறுத்தல்களுடன் அனைத்து மாநில்ங்கள், யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேசுகையில், வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையுடன் தொலைபேசி எண்கள் மற்றும் ஆதார் எண்களை இணைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
ஆனால் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் ஒரு தெளிவற்ற போக்குதான் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக 2015-ல் பிரம்மா பதவி வகித்தார். அப்போதுதான் ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுன் இணைக்கும் பணி தொடங்கியது. ஆனால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டதால் இந்த பணிகள் நிறுத்தப்பட்டன.
ஆனாலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என மத்திய அரசிடம் இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வந்தது. இதனடிப்படையில் 2021-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்படவில்லை. அதேநேரத்தில் வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைத்தும் வந்தனர். உச்சநீதிமன்ற வழக்குகளிலும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறி வருகிறது.
இந்த நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாகக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகி இருக்கின்றன. இது கள்ள ஓட்டு போடுவதை முற்றிலுமாகத் தடுக்கும் என்ற நம்பிக்கையையும் உருவாக்கி இருக்கிறது.
டெல்லி கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் பேசியது என்ன?
அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாட்டை இந்தியத் தேர்தல் ஆணையம் டெல்லியில் மார்ச் முதல் வாரத்தில் நடத்தியது. தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பொறுப்பேற்ற பின் நடைபெற்ற முதல் கூட்டம் அது.
இந்த கூட்டத்தில், நிறுவப்பட்ட சட்ட கட்டமைப்பிற்குள் நாட்டில் தேர்தல் நிர்வாகத்தில் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும் பல்வேறு தலைப்புகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களான டாக்டர் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள் (சிஇஓ), மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (டிஇஓ), வாக்காளர் பதிவு அதிகாரிகள் (இஆர்ஓ), வட்டாரநிலையிலான அதிகாரிகள் (பிஎல்ஓ) உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றவும், அனைத்து சட்டப்பூர்வக் கடமைகளையும் அதாவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 & 1951; வாக்காளர் பதிவு விதிகள் 1960, தேர்தல் நடத்தை விதிகள் 1961 மற்றும் அவ்வப்போது இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை உறுதியுடன் நிறைவேற்றவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது உரையில், அறிவுறுத்தினார்.
அரசியல் கட்சிகளுக்கு எளிதில் அணுகக்கூடியவர்களாகவும், பதிலளிக்கக்கூடியவர்களாகவும் இருக்குமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். தற்போதுள்ள சட்டப்பூர்வக் கட்டமைப்பிற்குள் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண, அனைத்து சட்டப்பூர்வ நிலைகளிலும் உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டங்கள்,சம்பந்தப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரியான இஆர்ஓ அல்லது டிஇஓ அல்லது சிஇஓ மூலம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு சிஇஓ-வும் மார்ச் 31, 2025 க்குள் அவர்கள் சம்பந்தப்பட்ட துணைத் தேர்தல் ஆணையருக்கு பிரச்சினை வாரியான நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
சட்டத்திலும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களிலும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளபடி, அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வட்டார நிலையிலான தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் தங்கள் பங்கினையும் பொறுப்புகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அரசியல் சட்டத்தின் பிரிவு 325 மற்றும் பிரிவு 326-ன் படி, 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். அனைத்து தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொள்ள பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும், அதே நேரத்தில் எந்தவொரு தேர்தல் ஊழியரோ அல்லது அதிகாரியோ தவறான கூற்றுகளைப் பயன்படுத்தி மிரட்டப்படுவதில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 800-1200 வாக்காளர்களைக் கொண்டிருக்கவும், ஒவ்வொரு வாக்காளரின் இல்லத்திலிருந்தும் 2 கி.மீ தூரத்திற்குள் வாக்குச் சாவடிகள் இருப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் வாக்களிப்பதை எளிதாக்குவதற்கு, முறையான, உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகளுடன் கூடிய வாக்குச் சாவடிகள் நிறுவப்பட வேண்டும். நகர்ப்புறங்களில் வாக்களிப்பை அதிகரிக்க, உயரமான கட்டிடங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வாக்குச் சாவடிகள் நிறுவப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
முதல் முறையாக ஒவ்வொரு மாநிலம்/யூனியன் பிரதேசத்திலிருந்தும் ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரி மாநாட்டில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சம்பளத்துடன் விடுமுறை கட்டாயம்.. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications