மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்.. அடுத்த வாரம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு!
டெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பான ஏற்பாடுகளை அடுத்த வாரம் இந்தியத் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதனையடுத்து மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபைகளுடன் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாகவும் ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்துகிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.

அதேநேரத்தில் நவம்பர் மாதத்தில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஜரூராக இறங்கிவிட்டன. மகாரஷ்டிராவில் ஆளும் மகாயுதி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் அகாடி கட்சிகளிடையேயும் தொகுதி பங்கீடு, முதல்வர் வேட்பாளர் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வங்கதேசம் மற்றும் மியான்மர் முஸ்லிம்கள் ஊடுருவியிருப்பதாகவும் ஆளும் கட்சியையே இந்த சக்திகள் ஆட்டுவிப்பதாகவும் பிரதமர் மோடி அண்மையில் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த பின்னணியில் ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு அடுத்த வாரம் செல்கிறது. இந்த இரு மாநிலங்களிலும் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும்.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8-ந் தேதி வெளியிடப்படும். இந்த வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த உடனேயே மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படக் கூடும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications