அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்படுவாரா? தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்படுவாரா? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியை இதுவரை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை.
இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில், தம்மை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தாங்கள் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் கேட்டது தேர்தல் ஆணையம். இதற்கு டெல்லி உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.

அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது; அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகவே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு மனு தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் கூடி அதிமுக விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை 2022 ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களை தொடர்ச்சியாக ஏற்க மறுத்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது உச்சநீதிமன்றம் தலையிட்டதன் அடிப்படையில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இவ்வழக்கில் புதிய திருப்பமாக எடப்பாடி பழனிசாமி தரப்பும் இன்று தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவைக் கொடுத்தது. அதில், கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அன்பரசு அறிவிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை நிறைவடைய உள்ளது. இதனால் அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரித்து இன்றே முடிவையும் அறிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் கர்நாடகாவில் பாஜகவின் கூட்டணியில் போட்டியிட அதிமுக திட்டமிட்டிருந்தது. ஆனால் இன்று திடீரென வேட்பாளரை அறிவித்தது. அத்துடன் உடனடியாக தேர்தல் ஆணையத்தையும் அணுகி இன்றே முடிவை அறிவிக்க வேண்டும் என கோரியிருக்கிறது எடப்பாடி தரப்பு. இதனால் இவ்வழக்கில் தேர்தல் ஆணையத்தின் முடிவு பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications