மின்சார கட்டணம் உயருகிறது? மத்திய பட்ஜெட்டில் வரப்போகும் முக்கிய அறிவிப்பு..| பட்ஜெட் 2026
டெல்லி: 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மின்சாரக் கட்டணங்களைக் கணக்கிடுவதில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய புதிய தேசிய மின்சாரக் கொள்கை 2026ஐ செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் மின் கட்டணம் உயரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
2026 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இன்னும் சில நாளே உள்ளது. பலரும் மத்திய பட்ஜெட்டில் என்னென்ன சலுகை இடம் பெறும் என்று ஆர்வமுடன் இருக்கிறார்கள். ஆனால் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரி சலுகை எதுவும் கடந்த ஆண்டு போல் இருக்காது. ஏனெனில் கடந்த ஆண்டே அரசு ஒரு லட்சம் வரை வருமான வரி இல்லை என்று அறிவித்துவிட்டது. தற்போதைய நிலையில் தங்கத்தின்விலை உயர்வை தடுக்க அரசு ஏதாவது செய்யுமா என்ற எதிர்பார்ப்புதான் அதிகமாக உள்ளது.

அதேநேரம் சில வரிகளும், கட்டண உயர்வும் இந்த முறை இருக்கும் என்கிறார்கள். அதில் முக்கியமானது மின்சாரக் கட்டணம். ஏனெனில் மின்சாரக் கட்டணங்களைக் கணக்கிடுவதில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய புதிய தேசிய மின்சாரக் கொள்கை 2026ஐ (National Electricity Policy 2026) செயல்படுத்த மத்திய அரசு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
புதிய தேசிய மின்சாரக் கொள்கை என்றால் என்ன?
மத்திய மின்சக்தி அமைச்சகம் வரைவு தேசிய மின்சாரக் கொள்கை (National Electricity Policy - NEP) 2026-ஐ வெளியிட்டுள்ளது. இது 2005-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைய கொள்கைக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டது. இந்தியாவை 2047-க்குள் வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி தனிநபர் மின்சார நுகர்வை 2030-க்குள் 2,000 kWh ஆகவும், 2047-க்குள் 4,000 kWh ஆகவும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது (தற்போது இது சுமார் 1,460 kWh ஆக உள்ளது).
அணுமின் உற்பத்தி
மின்சார விநியோக நிறுவனங்களின் நிதி நிலையைச் சீரமைக்க, வருடாந்திர மின் கட்டண மாற்றங்களை தானியங்கி முறையில் மாற்றியமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. 2047-ஆம் ஆண்டிற்குள் அணுமின் உற்பத்தியை 100 GW ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காகச் சிறிய மற்றும் நவீன அணு உலைகளை உருவாக்கத் தனியார் துறையுடன் அரசு கைகோர்க்கும். 2030-க்குள் கார்பன் உமிழ்வை 45% குறைக்கவும், 2070-க்குள் 'நிகர பூஜ்ய உமிழ்வு' நிலையை அடையவும் வழிவகை செய்கிறது.
பேட்டரி எனர்ஜி
உற்பத்தித் துறை, இரயில்வே மற்றும் மெட்ரோ இரயில் போன்றவற்றிற்கான கூடுதல் மின் கட்டணச் சுமைகளைக் குறைப்பதன் மூலம் இந்தியப் பொருட்களின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மின்சாரக் கட்டமைப்பில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் புகுத்துவதுடன், மின்சாரத் துறை சார்ந்த தரவுகளை இந்தியாவிற்குள்ளேயே சேமித்து வைப்பதைக் கட்டாயமாக்குகிறது. சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேமிக்க 'பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்' மற்றும் மின்சார வாகனங்களிலிருந்து மின்சாரத்தைப் பகிர்ந்தளிக்கும் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கப் புதிய அமைப்புகள் (DSO) உருவாக்கப்பட உள்ளது.
பட்ஜெட்டில் அறிமுகம்
இந்த முக்கிய அம்சங்களை கொண்ட தேசிய மின்சாரக் கொள்கை 2026 வரைவை மத்திய அரசு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்ய உள்ளதாம். இந்தக் கொள்கை மின்சாரத் துறையில் பெரிய புரட்சி என்கிறார்கள்.. ஆனால், இந்தக் கொள்கை மின்சாரக் கட்டண உயர்வு வடிவத்தில் நுகர்வோர் மீது விழும் என்கிறார்கள். பல மாநிலங்களில் மின்சார கட்டணங்கள் ஏற்கனவே மக்களின் மாதாந்திர செலவுகளை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகமாகும் என்கிறார்கள்.
தானியங்கி கட்டண உயர்வு
புதிய கொள்கையின்படி, எரிபொருள் விலை (நிலக்கரி போன்றவை) அல்லது மின்சாரத்தைக் கொள்முதல் செய்யும் செலவு அதிகரித்தால், மின் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்தின் ஒப்புதலுக்குக் காத்திருக்காமல் உடனடியாகக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அதிகாரம் வழங்கப்படலாம். இது மக்களின் தலையில் தான் விழும்
குறுக்கு மானியம் குறைப்பு
தற்போது தொழிற்சாலைகளிடம் அதிக கட்டணம் வசூலித்து, அந்தப் பணத்தைக் கொண்டு ஏழை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. புதிய கொள்கை இந்த குறுக்கு மானியத்தைக் குறைக்கச் சொல்கிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் மலிவாகக் கிடைக்கும், ஆனால் சாதாரண வீட்டு உபயோக நுகர்வோருக்கும் விவசாயிகளுக்கும் கட்டணம் பலமடங்கு உயரும் அபாயம் இருக்கிறது.
தனியார்மயமாக்கல்
மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்கள் நுழையும்போது, அவர்கள் லாபத்தை நோக்கியே செயல்படுவார்கள். இது ஆரம்பத்தில் சேவையை மேம்படுத்தினாலும், நீண்ட கால அடிப்படையில் சாமானிய மக்களுக்குக் கட்டுப்படியாகாத விலைக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வார்கள். எனவே கண்டிப்பாகமின் கட்டணம் உயரும்
மின் கட்டணம் எவ்வளவு
இந்தியாவில் மின்சார விநியோகத்தின் சராசரி செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ.6.8 ஆகும். இதில் உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம் மற்றும் நிர்வாக செலவுகளும் அடங்கும். ஆனால் பல மாநிலங்களில், விவசாயம் மற்றும் உள்நாட்டு நுகர்வுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குகின்றன. இதன் காரணமாக, மின்சார விநியோக நிறுவனங்களால் ஏற்பட்ட செலவுகளை மீட்டெடுக்க முடியவில்லை. இதன் விளைவாக, மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களை இழப்புகளை எதிர்கொள்கின்றன. மேலும், அவற்றின் கடனும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
மக்கள் பாதிக்கப்படுவார்கள்
குறியீட்டுடன் இணைக்கப்பட்ட கட்டண முறை செயல்படுத்தப்பட்டால், மாதத்திற்கு மாதம் மின்சாரக் கட்டணங்களில் மாற்றங்கள் வரும். எரிபொருள் விலைகள் அல்லது உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும் என்றால், அதே மாதத்தில் நுகர்வோரின் மின்சார கட்டணங்களை பாதிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே மாதாந்திர செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் குடும்பங்களுக்கு, இந்த மின் கட்டணம் கூடுதல் சவாலாக மாறும் அபாயம் உள்ளது.
மின் கட்டண உயர்வு உறுதி
தற்போது இந்தக் கொள்கை வரைவு நிலையில் உள்ளது. மேலும் அரசாங்கம் பல்வேறு துறைகளிடமிருந்து பரிந்துரைகளைப் பெறும். இந்தக் கொள்கை இறுதியாக செயல்படுத்தப்படும்போது, மின் கட்டணங்களைக் கணக்கிடுவதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கக்கூடும். இருப்பினும், அதனுடன் மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications