தினமும் ஆதாரங்களை அழிக்கிறார்கள்.. உடனே விசாரிக்கலைனா அவ்ளோதான்.. சுப்ரீம் கோர்ட்டில் பரபரத்த ED
டெல்லி: செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் ஆதாரங்கள் தினமும் அழிக்கப்பட்டு வருவதாக கடுமையான குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது அமலாக்கத்துறை. செல்வாக்கு மிக்க நபரான செந்தில் பாலாஜியை உடனே விசாரிக்காவிட்டால் விசாரணை நீர்த்துப்போகும் என்று வாதம் வைக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொர்ணர்வு மனுவுக்கு எதிராகவும், செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

சுப்ரீம் கோர்ட்டில்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு முடிவெடுப்பதாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அந்த வகையில், உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் இன்று ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இந்த தீர்ப்புக்கு பிறகு, அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் பரபரப்பான வாதம் முன்வைக்கப்பட்டது. அமலாக்கத்துறை சார்பாக ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ச்சியாக மருத்துவமனையில் இருப்பதால் அவரை எங்களால் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியவில்லை. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் ஆதாரங்கள் தினமும் அழிக்கப்பட்டு வருகின்றன.
விசாரணை நீர்த்துப் போகும்: மற்றொரு பக்கம் நீதிமன்றங்களில் இந்த விவகாரம் நிலுவையிலேயே இருந்து வருகிறது. இதனால் எங்களால் எங்கள் கடமையை செய்ய முடியவில்லை. செல்வாக்கு மிக்க நபரான செந்தில் பாலாஜியை உடனே விசாரிக்காவிட்டால் விசாரணை நீர்த்துப்போகும். அவரிடம் விசாரணையை தாமதப்படுத்த தாமதப்படுத்த இன்னும் விசாரணையை மோசமானதாக ஆக்கிவிடும் என வாதங்களை அடுக்கினார்.
மேலும், செந்தில் பாலாஜி ஏற்கனவே ரிமாண்ட் செய்யப்பட்டு விட்டார். அப்படி இருக்கும்போது விசாரணைக்காக கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் என்பது சட்டப்பூர்வமானதே இல்லை. எனவே ஆட்கொணர்வு மனு சட்ட கேள்விகளுக்கு உச் சநீதிமன்றம் தான் விடை காண வேண்டுமே தவிர, சென்னை உயர் நீதிமன்றம் தலையிட வேண்டாம் எனக் கோரினார்.
செந்தில் பாலாஜி தரப்பு: இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞராக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதி முடிவுக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது. எனவே ஐகோர்ட் முடிவை தெரிந்து கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது. மூன்றாவது நீதிபதியின் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என வாதம் வைத்தார்.
மேலும், செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கிறார், இப்போது அவரிடம் விசாரணை நடத்த முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டு தீர்ப்பு வருவதற்குள் அமலாக்கத்துறை ஏன் இவ்வளவு அவசரப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பினார்.
சுப்ரீம் கோர்ட் ஆர்டர்: இதையடுத்து, உடனடியாக உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு மிக முக்கியமான அறிவுறுத்தலை முன் வைத்துள்ளார். ஒரு வாரத்திற்குள் உடனடியாக 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமையுங்கள், விரைந்து மெரிட் அடிப்படையில் விசாரியுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யலாம் என்றும், நீதிமன்றம் ஜாமீன் வழங்காத நிலையில் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் இருப்பார் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதோடு, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு வழக்கு வரும் ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications