அமலாக்கத்துறை அதிரடி மூவ்.. செந்தில் பாலாஜி வழக்கு தீர்ப்பை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு!
டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் சென்னை ஐகோர்ட் மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது அமலாக்கத்துறை.
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

3வது நீதிபதி தீர்ப்பு: இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து வந்தார். முதல் நாளில் செவ்வாய்க்கிழமை செந்தில் பாலாஜி தரப்புக்கு ஆதரவாக கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதைத்தொடர்ந்து, கடந்த புதன்கிழமையன்று, அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை வைத்தார். தொடர்ந்து நேற்று பதில் வாதம், இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை செந்தில் பாலாஜி விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். கைது செய்யப்பட்டவர்களை விசாரணை அதிகாரிகள் விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம் என 3வது நீதிபதி தீர்ப்பளித்தார்.
அமலாக்கத்துறைக்கு சாதகம்: இரு நீதிபதிகள் அமர்வில், நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்புடன் தான் உடன்படுவதாக உறுதி செய்தார் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன். அமலாக்கதுறை சட்ட விதிகளின் படி தான் கைது செய்துள்ளது என்றும், செந்தில்பாலாஜியின் சிகிச்சை நாட்களை காவல் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது. செந்தில்பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனவும் 3வது நீதிபதி உத்தரவிட்டார்.
வரும் ஜூலை 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்படும். மேலும், ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேவியட் மனு தாக்கல்: இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என அமலாக்கத்துறை தமது மனுவில் வலியுறுத்தி உள்ளது. ஏற்கனவே விசாரணை நடைபெற்று வரும்போதே அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications