ராஜஸ்தானில் ஊழல் வலைக்குள் முதல்வரின் மகன்...மறுபக்கம் சகோதரருக்கு நோட்டீஸ்!!
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் அசோக் கெலாட் திணறி வருகிறார். இதற்கிடையே அவரது சகோதரர் அக்ரசைன் கெலாட்டை அமலாக்கத்துறை குறிவைத்து சோதனை மேற்கொண்டு, விசாரித்து வருகிறது. இன்றும் டெல்லியில் இருக்கும் அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் முன்பு சிறப்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமலாக்கத்துறை வெளிப்படையாக அக்ரசைன் கெலாட்டிடம் விசாரணை மேற்கொண்டு வந்தாலும், அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட்டுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. வைபவ் உடன் தொழில் கூட்டு வைத்து இருக்கும் ஆர்கே சர்மாவிடமும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவரையும் டெல்லியில் இருக்கும் தலைமை அலுவலகம் முன்பு ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
முதல்வரின் மகன் வைபவுடன் இணைந்து மொரீசியஸ் நாட்டில் முதலீடு செய்து இருப்பது, ஜெய்ப்பூருக்கு வெளியே ஃபேர்மாண்ட் ஓட்டல் நிறுவி இருப்பது ஆகியவற்றின் அடிப்படையில் சர்மாவுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த ஓட்டலில்தான் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கி வருகின்றனர். இந்த ஓட்டலில் முதலீடு செய்த வகையில் வருமான வரி ரூ. 97 கோடி கட்டாமல் மறைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்ட வகையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுப்பதற்கு வைக்கப்பட்டு இருந்த பொட்டாசியம் உரத்தை வெளிநாட்டுக்கு அதிக விலைக்கு விற்ற வகையில் அக்ரசைன் கெலாட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த வாரம் முழுவதும் விசாரிக்கப்பட்டு வந்தது. சரப் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட்டில் முதலீடு செய்யப்பட்டு இருக்கும் வகையிலும், அதன் மூலம் உரத்தை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வகையிலும் அக்ரசைன் கெலாட்டிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கோடிகளை கொட்டிக்கொடுத்த மொய் விருந்து... முடக்கிய கொரோனா... களையிழந்த புதுக்கோட்டை மாவட்டம்
கடந்த 2013 ஆம் ஆண்டில் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்ட வகையில் அக்ரசைன் கெலாட்டுக்கு சுங்கவரி அதிகாரிகள் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். கையில் பணம் பெற்றதை அப்போது அக்ரசைன் கெலாட் ஒப்புக் கொண்டு இருந்தார். இந்த வகையில் சட்ட விரோத பண பரிவர்த்தனையின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வருமான வரித்துறை விதித்து இருந்த ரூ . 61 கோடி அபராதத்தை கெலாட் செலுத்தினார். மொத்தம் 30,000 டன் அளவிலான பொட்டாசியம் உரத்தை ரூ. 130 கோடிக்கு விற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.