பிரதமர் மோடி தான் அற்புதமான மனிதர்!இங்கிலாந்து மாஜி கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் ஹிந்தியில் பாராட்டு
டெல்லி: ‛‛பிரதமர் நரேந்திர மோடி தான் அற்புதமான மனிதர். பிற தலைவர்கள் அவரை பின்பற்ற வேண்டும்'' என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் திடீரென்று ஹிந்தி மொழியில் பாராட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் தனது தாயை சந்தித்து ஆசி பெறும் பிரதமர் மோடி நேற்று வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.
நமீபியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்த சீட்டா எனும் சிறுத்தை புலி இனத்தை
மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய வனவிலங்கு பூங்காவில் திறந்து விட்டு கேமராவில் போட்டோ எடுத்து பிறந்தநாள் கொண்டாடினர்.

8 சீட்டாக்கள்
இந்தியாவில் 1952ம் ஆண்டில் சீட்டா இனம் முழுமையாக அழிந்துவிட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு 70 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் சீட்டா கால்பதித்துள்ளார். நமீபியா நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 3 பெண், 5 ஆண் சீட்டாக்கள் என மொத்தம் 8 சீட்டாக்கள் சிறப்பு விமானத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டன. இதனை தான் குனோ தேசிய வனவிலங்கு பூங்காவில் பிரதமர் மோடி திறந்து விட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த செயலை வனவிலங்கு ஆர்வலர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

பாஜக ட்விட்
இந்நிலையில் பாஜக சார்பில் ஒரு ட்வீட் போடப்பட்டு இருந்தது. அதாவது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு வனவிலங்குகளை காக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அதில் சில விஷயங்கள் கூறப்பட்டு இருந்தன. இந்த ட்விட்டில் மொத்தம் 4 படங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. அதில் 2014ல் 2600 என்ற அளவில் இருந்த காண்டாமிருகங்கள் 2020ல் 3600 ஆகவும், 2014ல் 411 ஆக இருந்த சிங்கங்கள், 2018 ல் 674 ஆகவும், 2014ல் 2,226 ஆக இருந்த புலிகள் 2018 ல் 2,967 ஆகவும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடந்த 7 ஆண்டுகளாக பல்லூயிர் பெருக்கத்துக்காக இந்தியா மேற்கொண்ட விபரங்கள் இடம்பெற்றிருந்தன.

மகத்தான சாதனை
மேலும் இந்த பதிவில் ‛‛பிரதமர் நரேந்திர மோடி வனவிலங்கு பாதுகாப்பை நோக்கமாகவும், ஆர்வமாகவும் கொண்டு செயல்படுகிறார். இதுதொடர்பாக பாஜகவின் பல்வேறு முயற்சிகள் வனநிலங்கு பாதுகாப்பு விஷயத்தில் மகத்தான சாதனைகளை செய்துள்ளது. அதன்படி வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது'' என கூறப்பட்டு இருந்தது.

பீட்டர்சன் பாராட்டு
இதனை குறிப்பிட்டு தான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை இங்கிலாந்து அணியில் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக ஹிந்தி மொழியில் கெவின் பீட்டர்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‛‛இந்தியாவில் வனவிலங்குகளை பாதுகாப்பதில் உங்களின் தொடர் முயற்சிகளுக்கு நன்றி. இது என் மனதுக்கு மிகவம் நெருக்கமான ஒன்று. நீங்கள் ஒரு அற்புதமான மனிதர். உங்கள் வழியை அனைத்து தலைவர்களும் பின்பற்ற வேண்டும்'' எனக்கூறி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் ட்விட்டர் ஐடிகளை டேக் செய்துள்ளார். கெவின் பீட்டர்சனின் இந்த ட்விட்டருக்கு தற்போது பல்வேறு தரப்பின் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முதல் முறையல்ல
பிரதமர் நரேந்திர மோடியை கெவின் பீட்டர்சன் பாராட்டுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அவர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்தியாவில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு கெவின் பீட்டர்சன் ஏற்கனவே பிரதமர் மோடியை பாராட்டி நன்றி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications