பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வியாழக்கிழமை இரவு சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் பேசியுள்ளார். முன்னதாக, அமித் ஷாவை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஹோட்டலில் சுமார் 2 மணி நேரமாக காத்திருந்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் மற்றொரு கூட்டணியும் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தனித்தே களம் காண்கிறது.

இந்தச் சூழலில் அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு இன்னும் எட்டப்படவில்லை. பாஜக 30 தொகுதிகளைக் கேட்பதாகவும், எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக குக்கர் சின்னத்துக்கு பதிலாக இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
180 முதல் 185 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் அமித்ஷாவிடம் தகவல் தெரிவிக்க, அவரது அழைப்பின் பேரில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வியாழக்கிழமை மதியம் டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவரை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், "டெல்லி பயணத் திட்டம் குறித்து நாளைக்கு விரிவாக சொல்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
பின்னர் வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு சந்திப்பதாக அமித் ஷா நேரம் கொடுத்ததாக தகவல் வெளியான நிலையில் சுமார் 2 மணி நேரமாக ஹோட்டலில் காத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. நீண்ட நேரமாக ஹோட்டலிலேயே எடப்பாடி பழனிசாமி காத்துக் கொண்டிந்ததால் இன்று அமித் ஷா எடப்பாடி சந்திப்பு நடக்கப்போவதில்லை என தகவல்கள் பரபரத்தன.
இந்நிலையில், 10.30 மணிக்கு ஹோட்டலில் இருந்து, அமித் ஷா வீட்டுக்குப் புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சவை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி சந்திப்பை நிறைவு செய்துவிட்டு புறப்பட்டார்.
அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரு கட்சிகளும் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வெள்ளிக்கிழமை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கேயே தொகுதி பங்கீட்டை பேசி முடிக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications