தீரா பகை.. தொடரும் மோதல்கள்! கல்வான் மோதலுக்கு பிறகும் எல்லையில் வாலாட்டிய சீனா! பதிலடி தந்த இந்தியா
டெல்லி: இந்தியா சீனா இடையே கல்வான் மோதலுக்குப் பிறகு நடந்த சிலர் பகீர் தாக்குதல்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியா சீனா இடையே கடந்த பல ஆண்டுகளாகவே மோதல்கள் இருந்து வருகிறது. இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகளைச் சீனா தனக்குச் சொந்தமானது என்று சொல்வது இந்த சர்ச்சைக்குக் காரணம்.

அதிலும் கடந்த 2020இல் இந்தியா சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு எல்லையில் நிலைமை மேலும் மோசமானது.
இந்தியா சீனா மோதல்: இதற்கிடையே இந்தியா சீனா மோதல்கள் குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது எல்ஐசி எனப்படும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே இதுவரை அறியப்படாத இரண்டு மோதல் சம்பவங்கள் நடந்துள்ளது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய ராணுவ வீரர்களுக்குச் சமீபத்தில் வீர விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், அதன் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த வாரம் இந்தியா ராணுவத்தின் மேற்கு கமேண்டில் சிறந்த வீரர்களுக்கான விருதுகள் தரப்பட்டன. அதில் சீன ராணுவ வீரர்களின் அத்துமீறல் நடத்தைக்கு இந்திய வீரர்கள் எப்படி உறுதியாகப் பதிலடி கொடுத்தனர் என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இந்தியா ராணுவத்தின் மேற்கு கமேண்டின் தலைமையகம் சண்டிமந்திரில் அமைந்துள்ளது. அங்கே கடந்த ஜனவரி 13 ஆம் தேதி நடந்த விழாவின் வீடியோவில் தான் இந்தத் தகவல்கள் உள்ளன.
மோதல்கள்: இந்த தாக்குதல் சம்பவங்கள் செப்டம்பர் 2021 மற்றும் நவம்பர் 2022 காலகட்டத்தில் நடந்துள்ளன. இந்த இந்தியா சீனா தாக்குதல் குறித்து வெளியுலகிற்குத் தெரியாது. இது குறித்து இணையத்தில் பேசுபொருள் ஆன உடனேயே இதை இந்திய ராணுவம் அகற்றிவிட்டது. இந்த விவகாரம் குறித்து இந்திய ராணுவம் எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
கடந்த 2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் பகுதியில் இந்தியா சீனா ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து 3,488 கிமீ நீளமுள்ள எல்ஏசியில் இந்திய ராணுவம் ராணுவத்தைக் குவித்துள்ளது. இந்த கல்வான் மோதலுக்குப் பிறகு கிழக்கு லடாக் எல்லையில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே பல மோதல் சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனாவின் அத்துமீறல்: சீன வீரர்கள் எல்ஏசியின் தவாங் செக்டரிலும் அத்துமீற முயன்றுள்ளனர். கடந்த 2022 டிசம்பர் 9ஆம் தேதி சீன வீரர்கள் தவாங் செக்டரின் யாங்ட்சே பகுதியில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு இது குறித்துப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்திருந்தார். சீன அத்துமீறலை இந்திய வீரர்கள் உறுதியான முறையில் எதிர்கொண்டதாகக் கூறினார்.
சீன அத்துமீறல் முயற்சிக்குப் பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் இதில் இரு தரப்பிலும் சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டு இருந்தது. கல்வான் மோதலுக்குப் பிறகு இந்தியா சீனா இடையே பெரியளவில் மோதல் இல்லை என நாம் நினைத்த நிலையில், ஆனால், அதன் பிறகும் மோதல் இருந்துள்ளது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications