"கிருஷ்ணரே ஊழல் செய்தார் என்பார்கள்!" தேர்தல் பத்திரம் ரத்து தீர்ப்பு! மறைமுகமாக பிரதமர் மோடி தாக்கு
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்த நிலையில், இதை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும் முறையைக் கொண்டு வந்ததது. இந்த முறையில் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்த தகவல்களை வெளியிடத் தேவையில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் தகவல்களைப் பகிரத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் தேர்தல் பத்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
தேர்தல் பத்திரங்கள்: இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த தேர்தல் பத்திரம் முறையே செல்லாது என்றும் அது சட்டவிரோதமானது என்றும் அறிவித்தது. மேலும், இந்த முறையில் இதுவரை அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்த தகவல்களைப் பகிர வேண்டும் உச்ச நீதிமன்றம் நீதிமன்றம் கூறியிருந்தது. இதற்கிடையே நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மறைமுகமாக விமர்சித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அங்கே மாநிலம் முழுவதும் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 14,000 வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் ஸ்ரீ கல்கி தாம் கோயிலுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஸ்ரீ கல்கி தாம் டிரஸ்ட் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி: அப்போது உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசினார். தேர்தல் பத்திரத் திட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்து இருந்த நிலையில், பிரதமர் மோடி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
ஸ்ரீ கல்கி தாம் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்தார். தேர்தல் பத்திரங்கள் தொடர்பாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் அத்திட்டத்தை 'அரசியலமைப்புக்கு எதிரானது’ என்று தீர்ப்பளித்து இருந்தது. அதை மறைமுகமாக விமர்சிக்கும் வகையிலேயே பிரதமர் மோடியின் பேச்சு இருந்தது.
மறைமுகமாக விமர்சனம்: பிரதமர் மோடி பேசும் போது தன்னையும் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணனையும் பகவான் கிருஷ்ணர் மற்றும் சுதாமாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். அவர் பேசும்போது, "இந்த உலகிற்குக் கொடுக்க அனைவருக்கும் ஏதாவது ஒன்று இருக்கிறது என்றார் அவர் (ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம்).. ஆனால் என்னிடம் எதுவும் இல்லை, நான் என் உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்த முடியும். பிரமோத் கிருஷ்ணம் ஜி நல்லவேலை நீங்கள் எனக்கு எதையும் தெரியவில்லை. ஏனென்றால் இப்போது காலம் மாறிவிட்டது.
இன்றைய காலகட்டத்தில் சுதாமா ஸ்ரீ கிருஷ்ணருக்கு உணவு கொடுத்து அந்த வீடியோ வெளியானால் அது குறித்தும் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்வார்கள். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் அளிக்கும். ஏதோ கிருஷ்ணர் ஊழல் செய்வதாகச் சொல்வார்கள். எனவே, நீங்கள் உங்கள் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துங்கள்.. எனக்கு எதையும் கொடுக்காமல் இருப்பது நல்லது" என்றார்.












Click it and Unblock the Notifications