இந்தியாவில் "இவிஎம்" ஒரு கருப்பு பெட்டி.. ராகுல் காந்தி மீண்டும் பரபர குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்ள் ஏஐ மூலம் அவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து சிறியதாக இருந்தாலும், அதிகமாகவே உள்ளது என்று எலான் மஸ்க் கூறிய நிலையில், ராகுல் காந்தி இவிஎம் இயந்திரங்களை கருப்பு பெட்டி என விமர்சித்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இவிஎம் எனப்படும் இயந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அவ்வப்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறி வருகிறது.

இந்த நிலையில், தான் தற்போது உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி கூறிய கருத்து மீண்டும் விவாதப்பொருளாகியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குப்பதிவு முறைகேடுகள் தொடர்பாக சுயேச்சை அதிபர் வேட்பாளரான ராபர்ட் எப் கென்னடி ஜூனியர் தனது எக்ஸ் தளத்தில் குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்.
அதில், "போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற முதன்மைத் தேர்தலில் இவிஎம் இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அதிர்ஷ்டவசமாக, ஆவணங்கள் இருந்ததால், வாக்கு எண்ணிக்கை சரி செய்யப்பட்டது. ஆவணங்கள் இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் என்ன நடக்கும்?" என்று கூறியிருந்தார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டு இருந்த பதிவுக்கு பதிலளித்து இருந்த எலான் மஸ்க், இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் மனிதர்கள் அல்லது ஏஐ மூலமாக ஹேக் செய்யும் ஆபத்து உள்ளது என்ற ரீதியில் பதிவிட்டு இருந்தார். எலான் மஸ்க்கின் இந்த பதிவு இந்தியாவில் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கருப்பு பெட்டி எனக் கூறி சாடியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதவாது:-
இந்தியாவில் இவிஎம் என்பது கருப்பு பெட்டியாகும். வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செயய் யாருக்கும் அனுமதி கொடுப்பது இல்லை. தேர்தல் நடைமுறைகளின் வெளிப்படத்தன்மை தொடர்பாக தீவிர கவலைகள் எழுப்பப்படுகின்றன. அமைப்புகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் போது ஜனநாயகம் சீர்குலைந்துவிடும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications