உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு உறுதியானதும்.. தனியார் துறையிலும் ரிசர்வேஷன் கேட்கும் உமா பாரதி
டெல்லி: உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவு செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், இடஒதுக்கீட்டு முறையை தனியார் துறையிலும் நாம் அமல்படுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு உயர் ஜாதி வகுப்பு ஏழை மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்து மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

10 சதவீத இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடானது 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு இருப்பதாக கூறி மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

செல்லும் என தீர்ப்பு
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், உயர் ஜாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அளிக்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று 3 நீதிபதிகளும் செல்லாது என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்ததனர்.

பாராட்டி கருத்து
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் சமூக நீதி திட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாஜக தலைவர்கள் பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான உமா பாரதியும் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் அளிக்கும் மத்திய அரசின் முடிவு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

தீர்ப்பு வரவேற்புக்குரியது
இது தொடர்பாக உமா பாரதி கூறுகையில், "கல்வி, வேலை வாய்ப்புகளில் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் அளிக்கும் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒபிசி) அதிகம் உள்ள மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் சில சிறப்பு சூழல்களின் அடிப்படையில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம்.

தனியார் துறையிலும்..
ஏழைகள் அனைவரும் ஏழை என்ற ஒரே சாதிதான். இந்த இட ஒதுக்கீடு நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும். உலகில் உள்ள அனைத்து மக்களும் தங்களின் மேம்பட்ட வாழ்க்கைக்காக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோளாகும். இடஒதுக்கீட்டு முறையை தனியார் துறையிலும் நாம் அமல்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மிகப்பெரும் ஊக்கமாக
முன்னதாக பாஜக பொதுச்செயலாளர் (அமைப்பு) பிஎல் சந்தோஷ், ''இடஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கான உயர்ஜாதி ஏழைகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்கான சட்ட மாண்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பிரதமர் மோடியின் கரீப் கல்யான் தொலைநோக்கு திட்டத்திற்கான மற்றொரு பெருமையாக அமைந்துள்ளது. சமூக நீதிக்கான திசையில் மிகப்பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications