உயர்சாதி இடஒதுக்கீடு.. அரசியலமைப்பை ஏமாற்றுவது! பிளவே சாதியால்தான் - உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்
டெல்லி: உயர்சாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பை ஏமாற்றும் செயல் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதிட்டு உள்ளார்.
சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு முறை இந்தியாவில் தொன்று தொட்ட காலம் முதல் இன்று வரை நீடித்து வருகிறது. இந்த இழிவை அடியோடு ஒழித்து சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.
தாழ்த்தப்பட்ட சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று வகைப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய மாநில அரசுகள் இடஒதுக்கீட்டை வழங்கி வருகின்றன.
ஹிஜாப் அணியும் பெண்களை கண்ணியமாக பார்க்க வேண்டும்.. அதுதான் அவர்கள் பலமே- உச்சநீதிமன்றத்தில் வாதம்
சாதி ஒடுக்குமுறை
இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக முற்பட்ட பிரிவினர் என்று அழைக்கப்பட்ட உயர்சாதியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், இந்த இடஒதுக்கீட்டு முறையின் காரணமாகவே சாதியால் கல்வியே கற்காமல் இருந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் படித்து பட்டம் பெற்றனர்.
இடஒதுக்கீட்டின் பயன்
இந்த சாதியினர் இந்த தொழிலை செய்ய வேண்டும் என்ற பிற்போக்குத்தனம் மறைந்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் நீதிபதிகளாக, அரசு உயரதிகாரிகளாக, ஆசிரியர்களாக உயர்ந்தனர். இப்படி இந்தியாவில் சமூக நீதியை ஓரளவுக்கு நிலைநாட்டியதில் இடஒதுக்கீட்டின் பங்கு மகத்தானது.
உயர்சாதி இடஒதுக்கீடு
ஆனாலும் முழுமையாக இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு நீங்கவில்லை. அதுவரை இடஒதுக்கீடு அவசியமாகிறது. இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து வந்த உயர்சாதியினர், தற்போது தங்கள் சமுதாயத்திலும் ஏழைகள் இருப்பதால் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினர்.
10% இடஒதுக்கீடு
ஆனால், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முற்போக்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், நாடாளுமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகள் முன்பாக உயர்சாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது.
வழக்குகள்
இதற்காக அரசியலமைப்பின் 103 வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இடஒதுக்கீடு வரம்பு 50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறிவிட்டதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பில் இடமில்லை என்று கூறி திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் வழக்கு தொடர்ந்தனர்.
உச்சநீதிமன்றம் விசாரணை
இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் மோகன் கோபால், 103 வது பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் அரசியலமைப்பை ஏமாற்றும் செயல்.
காரசார வாதம்
நாடு சாதி அடிப்படையில்தான் பிரிந்து இருக்கிறது. இதுவே எதார்த்தம். இந்த சட்டத்திருத்தம், அரசியலமைப்பு என்பது ஏழைகளைவிட சலுகை பெற்றுவர்களையே பாதுகாக்கும் என்ற மனநிலை மக்கள் மத்தியில் ஏற்படும். இது அரசியலமைப்பு சாசனத்தின் சமூக நீதி குறித்த நோக்கத்தை சிதைக்கிறது." என்றார்.