இந்தியாவில் தீவிர பாதிப்பு ஏற்படுத்துமா கொரோனா 4ஆம் அலை? ஆய்வாளர்கள் கூறுவது என்ன.. பரபர தகவல்
டெல்லி: உலகில் சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் வரும் காலத்தில் ஏற்படும் கொரோனா அலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஆய்வாளர்கள் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதல்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகள் மத்தியில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா போன்ற உலக வல்லரசுகள் தொடங்கி எந்த நாடும் கொரோனா பெருந்தொற்றின் கோரப் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.
ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் என அடுத்தடுத்து புதிய கொரோனா வகைகள் உருமாறி வருவதால் அதை முற்றிலுமாக அழிப்பது கிட்டதட்ட முடியாத ஒன்றாகிவிட்டது. இதுபோன்ற உருமாறிய கொரோனா வகைகளால் அடுத்தடுத்து அலைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்
இந்நிலையில், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கிடையே வேக்சின் தொடர்பாகவும் இயற்கையாக ஏற்படும் ஆன்டிபாடிகள் தொடர்பாகவும் ஆய்வாளர்கள் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். கொரோனா ஆன்டிபாடிகள் போதுமான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பதால், நாட்டில் வரும் காலத்தில் ஏற்படும் கொரோனா அலைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறையும் கொரோனா
மேலும், தினசரி கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால் மாஸ்க் அணிவதில் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாகவும் அரசு பரிசீலனை செய்யலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெறும் 1,761 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இது கடந்த 688 நாட்களில் மிகக் குறைவானதாகும். அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் 26 ஆயிரமாகக் குறைந்துள்ள நிலையில், உயிரிழப்புகளும் 127ஆகக் குறைந்துள்ளது.

உருமாறும் கொரோனா
இது குறித்து எய்மஸ் மருத்துவமனையில் பணிபுரியும் முதன்மை ஆய்வாளர் டாக்டர் சஞ்சய் ராய் கூறுகையில், "கொரோனா பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. ஏற்கனவே இந்த கொரோனா வைரசில் 1,000க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், 5 கொரோனா வகைகள் மட்டுமே தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா மிகவும் மோசமான இரண்டாவது அலையைச் சந்தித்தது, இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் தற்போது இதுவே நமது முக்கிய பலமாகும் மாறிவிட்டது.

ஆன்டிபாடிகள்
ஏனென்றால், இப்படி இயற்கையாகத் தோன்றும் ஆன்டிபாடிகள் தான் சிறந்த மற்றும் நீண்ட கால பாதுகாப்பை வழங்குகிறது. அதேபோல நாட்டில் ஏற்கனவே அதிகப்படியான மக்களுக்கு கொரோனா வேக்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலத்தில் ஏற்படும் கொரோனா அலைகள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறைவு. இதன் காரணமாக மாஸ்க் கட்டாயம் என்ற முடிவையும் தளர்த்துவது குறித்து அரசு பரிசீலனை செய்யலாம். முதியவர்கள் மற்றும் எளிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தொடர்ந்து மாஸ்க் அணிய வேண்டும். அதேபோல புதிய உருமாறிய கொரோனா ஏற்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பணிகளையும் அரசு தொடர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா
புதிய உருமாறிய கொரோனா உருவாகினாலும் கூட, அது தீவிர பாதிப்பை ஏற்படுத்துவது குறைவு என்று தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சந்திரகாந்த் லஹரியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "தற்போது நம்மிடம் இருக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று தைரியமாகச் சொல்லலாம். இந்தியாவைப் பொருத்தவரை புதிய உருமாறிய தோன்றினாலும் கூட அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறைவு.

பிரச்சினை இல்லை
ஏற்கவே கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பில் இருந்து பெறப்பட்ட தடுப்பு ஆற்றல், வேக்சின் தடுப்பாற்றல் ஆகியவை வைரஸ் பரவலை வெகுவாக கட்டுப்படுத்தும். வேக்சின் தரும் ஆன்டிபாடிகள் குறிப்பிட்ட காலத்தில் குறையத் தொடங்குவது நமக்கு தெரியும். ஆனால், ஹைபிரிட் தடுப்பாற்றல் என்பது பல மாதங்கள் ஆனாலும் தொடரும் என்பதால் புதிய உருமாறிய கொரோனா இப்போதைக்குப் பிரச்சினை இல்லை" என்றார்.

வேக்சின் முக்கியம்
நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் என் கே அரோரா, "வேக்சின் பணிகள் காரணமாகவே கொரோனா பெருந்தொற்று குறைந்துள்ளது. ஆனால் இதற்காக நாம் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் 2 டோஸ் வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும். தகுதியானவர்கள் 3ஆவது முன்னெச்சரிக்கை டோஸும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து கட்டுக்குள் வைக்க முடியும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications