சபரிமலை.. பெண்கள் வழிபட உச்சநீதிமன்றம் அனுமதிக்க என்ன காரணம்? சீராய்வு மனுவில் கூறப்பட்டது என்ன?
Recommended Video
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த சீராய்வு மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கின் பின்னணி மற்றும் சீராய்வு மனுவில் வலியுறுத்தப்பட்ட அம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில், 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், நுழைவதற்கான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது.
பக்தியை பாலின பாகுபாட்டிற்கு உட்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. பக்தியில் சமத்துவத்தை ஒடுக்கும் ஆணாதிக்க கருத்தை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.

பெண் நீதிபதி
ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் இடம் பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும், சபரிமலை பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தார். நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கன்வில்கர், மற்றும் அப்போதைய தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா ஆகிய, இந்த பெஞ்சில் அங்கம் வகித்த பிற 4 நீதிபதிகளும், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என தீர்ப்பு வழங்கினர்.

உடலியல் அம்சம்
தீபக் மிஸ்ரா, தனது தீர்ப்பில், பெண்களை குறைவாகவோ அல்லது பலவீனமாகவோ கருத முடியாது. இந்த நாட்டில் பெண்களை தெய்வங்களைப் போல வழிபடுகிறார்கள். எந்தவொரு உடலியல் அல்லது உயிரியல் காரணிகளாலும் வழிபாட்டு உரிமையை மறுக்க முடியாது. இதற்கு சட்டத்தில் இடமில்லை என்றார். மாதவிடாய் போன்ற உயிரியல், உடலியல் அம்சங்களின் அடிப்படையில் பெண்களை கடவுள் வழிபாட்டிலிருந்து, விலக்குவது அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் பாரபட்சமானது என்று அந்த பெஞ்ச் கூறியது.

ஆணாதிக்கம்
ஒரு குறிப்பிட்ட வயதுடைய பெண்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது, இந்து மதத்தின் இன்றியமையாத பகுதியாக இல்லை. 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை கோவிலுக்குள் விடாமல், இருப்பது, கேரள கோயில் நுழைவுச் சட்டத்தின் 3 (ஆ) இந்து மதத்தை வழிபடுவதற்கான சுதந்திரத்தை மீறும் செயல். வணங்குவதற்கான உரிமை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொந்தமானது, இந்த தடை மத ஆணாதிக்கம் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியது.

பிற நீதிபதிகள்
நீதிபதி நாரிமன் தனது தீர்ப்பில், ஐயப்ப பக்தர்கள் ஒரு புது மதத்தை உருவாக்கவில்லை, ஆனால் அவர்கள் இந்து வழிபாட்டின் ஒரு பகுதி. எல்லா வயதை சேர்ந்த பெண்களும், ஐயப்ப வழிபாட்டில், சம வழிபாட்டாளர்கள் என்றும், எனவே அவர்கள் மாதவிடாய் உடையவர்கள் என்ற காரணத்தினால் கோவிலுக்குள் சிலர் நுழைவதைத் தடுக்க பாலினம் ஒரு காரணமாக இருக்க முடியாது என்றும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 10 முதல், 50 வயதிற்குட்பட்ட பெண்களைத் தடைசெய்யும் சபரிமலை கோயில் வழக்கம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 26 க்கு எதிரானது. பெண்ணுக்கு வழிபடுவதற்கு சம உரிமை உண்டு என்றும் அவர் தெரிவித்தார். நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில், பெண்களை கடவுளின் இரண்டாம்பட்ச பிள்ளைகளாக கருதுவது அரசியலமைப்பை மீறுவதாகும். உடலியல் அல்லது மத நடைமுறை, பெண்களின் கண்ணியத்திற்கு எதிராக இருந்தால் அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அவர் கூறினார்.

சீராய்வு மனு
தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, தேசிய ஐய்யப்ப பக்தர்கள் சங்கம் (NADA) தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: ஊடக தலைப்புச் செய்திகளுக்கு ஆசைப்பட்டவர்களால், வரவேற்கப்பட்ட தீர்ப்பு இதுவாகும். வழங்கப்பட்ட தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பகுத்தறிவற்றது என்று கூறப்பட்டுள்ளது, இந்த ஒரு மனு மட்டுமின்றி, நாயர் சொசைட்டி சர்வீஸ் போன்ற பல அமைப்புகளும் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த அமைப்பு தனது மனுவில், ஐயப்பன் ஒரு 'நித்திய பிரம்மச்சாரி' என்று வணங்கப்படுவதால், 10 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அவரை வணங்குவதற்கு தகுதியுடையவர்கள் என்றும், பெண்கள் வழிபடவே கூடாது என்று ஐயப்பன் வழிபாட்டில் சொல்லப்படவில்லை என்றும், வழிபாட்டுக்காக, 40 வருடங்கள் காத்திருப்பதை, எப்படி விலக்கு என்று கருத முடியும்? என்றும், கேள்வி எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications