இந்தியாவில் பொருளாதார அவசர நிலையை கொண்டு வர பிரதமர் மோடி திட்டமா?.. உண்மை இதுதான்!
இந்தியாவில் இன்று பிரதமர் மோடி பொருளாதார அவசர நிலையை செயல்படுத்த முடிவு செய்து இருக்கிறார் என்று பொய்யான தகவல் ஒன்று இணையம் முழுக்க பரவி வருகிறது.
டெல்லி: இந்தியாவில் இன்று பிரதமர் மோடி பொருளாதார அவசர நிலையை செயல்படுத்த முடிவு செய்து இருக்கிறார் என்று பொய்யான தகவல் ஒன்று இணையம் முழுக்க பரவி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த வாரம் பிரதமர் மோடி மக்கள் முன்னிலையில் பேசினார். கொரோனாவை தடுக்கும் வகையில் மக்கள் தாமாக முன் வந்து ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்து இருந்தார்.
அதை ஏற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுக்க ஊரடங்கு பின்பற்றப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எல்லோரும் வீட்டிற்குள் இருந்தனர்.

மோடி மீண்டும் பேசுகிறார்
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் மக்கள் முன்னிலையில் பேச இருக்கிறார். இன்று இரவு 8 மணிக்கு அவர் தொலைக்காட்சியில் தோன்றி பேச உள்ளார். கொரோனா குறித்தும், கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடி இன்று பேச உள்ளார். பெரும்பாலும் கொரோனாவிற்கு எதிராக மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும், கட்டாய ஊரடங்கு, 144 உத்தரவு குறித்து மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் வதந்தி பரவியது
ஆனால் பிரதமர் மோடி இந்தியாவில் பொருளாதார அவசர நிலையை செயல்படுத்த முடிவு செய்து இருக்கிறார் என்று தகவல் ஒன்று இணையம் முழுக்க பரவி வருகிறது. இன்று அல்லது இந்த வாரம் பொருளாதார அவசர நிலை கொண்டு வரப்படும். கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இந்த அவசரநிலை கொண்டு வரப்படும் என்று செய்திகள் வெளியானது. பல இணையதள பக்கங்கள் இந்த செய்தியை வெளியிட்டு இருந்தது.

பொருளாதார அவசர நிலை என்றால் என்ன?
இந்தியாவில் சட்ட பிரிவு 360ன் கீழ் குடியரசுத் தலைவர் பொருளாதார அவசர நிலையை கொண்டு வர முடியும். பிரதமரின் அறிவுரையின் பெயரில் இந்த முடிவை குடியரசுத் தலைவர் எடுக்க முடியும். இதன் மூலம் மாநிலங்களின் பட்ஜெட்டை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். மாநிலங்கள் தங்கள் நிதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட முடியும். சுருக்கமாக பொருளாதார ரீதியாக மாநில அரசுகளை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும்.

செய்தியில் உண்மை இல்லை
ஆனால் இப்படி வெளியான செய்தியில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது சிலர் கிளப்பிய வதந்தி. இது தொடர்பாக மத்திய செய்தி தொடர்பு துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் மத்திய அரசுக்கு பொருளாதார அவசர நிலையை கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை. அதனால் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications