ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவுக்கு எதிரான வழக்கு என்ன? 7 கேள்விகள், பதில்கள்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது.
அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் பின்னணி குறித்த முழு விவரங்கள்:

அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு என்பது என்ன?
அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவானது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கான பல சட்டங்கள் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது என்பதை வலியுறுத்துகிறது இந்தப் பிரிவும் இதனுடன் இணைந்த 35A பிரிவும்.
370வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் அனுபவித்த உரிமைகள் என்ன?
) ஜம்மு காஷ்மீரை முன்வைத்து பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு தவிர்த்த இதர விவகாரங்களில் மத்திய அரசு ஒரு சட்டம் நிறைவேற்றினால் ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும்.
2) இந்தியாவின் பிற மாநில அரசு கலைக்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவு ஜம்மு காஷ்மீரில் செல்லுபடியாகாது. இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் கிடையாது.
3) ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் இரட்டை குடியுரிமை அதாவது மாநில குடியுரிமை; இந்திய குடியுரிமை பெறக் கூடியவர்கள்.
4) ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சாசனம் உருவாக்கப்படலாம்
5) ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்தியாவின் தேசிய கொடி இல்லாமல் தனி ஒரு கொடி உருவாக்கிக் கொள்ளலாம்.
6) ஜம்மு காஷ்மீர் தனி சட்டமன்றத்தை வைத்து கொள்ள முடியும். அது தனித்துவமானது.
7) ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை பதவி காலம் 6 ஆண்டுகள்.
8) 370-வது 35A பிரிவின் கீழ் இந்தியாவின் பிற மாநில மக்கள் யாரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலம், சொத்துகள் வாங்க முடியாது.
9) இந்தியா முழுவதும் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்த அரசியல் சாசனத்தின் 360-வது பிரிவு பயன்படுத்தப்படும். ஆனால் இந்த 360-வது பிரிவு ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது. இந்தியா முழுவதும் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்தும் ஜனாதிபதியின் அதிகாரம், ஜம்மு காஷ்மீரில் செல்லாது.
10) ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கு அந்த மாநில அரசுதான் பரிந்துரை செய்ய வேண்டும். இந்திய அரசு அல்லது இந்திய ஜனாதிபதியால் தன்னிச்சையாக ஜம்மு காஷ்மீரில் அவசர நிலை அல்லது ஆட்சி மாற்றத்தை உருவாக்க முடியாது.
அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து ஏன்? எப்போது நடந்தது?
இந்தியாவின் அத்தனை மாநிலங்களும் சமமானவை; அரசியல் சாசனத்தின் 370, 35A பிரிவுகள் ஜம்மு காஷ்மீரில் அமலில் இருப்பதால் பயங்கரவாதிகள் கை ஓங்குகிறது என்பது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து மத்தியில் ஆளும் பாஜக 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி இந்தப் பிரிவுகளை நாடாளுமன்றம் மூலம் ரத்து செய்தது.
370-வது பிரிவு ரத்து மூலம் ஜம்மு காஷ்மீரில் நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட உடன் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலமும் 2 ஆக பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலான 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. 1) ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் 2) லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டன. இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டசபையை கொண்டது; லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை கிடையாது
370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கு என்பது என்ன?
அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்துக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கபட்டது. 2019-ல் தொடரப்பட்ட வழக்கு 2023 ஆகஸ்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. மொத்தம் 16 நாட்கள் விசாரணை நடைபெற்றது. 2023 செப்டம்பர் 5-ந் தேதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
370-வது பிரிவு வழக்கு யாரால் தொடரப்பட்டது? விசார்த்து தீர்ப்பு தந்த நீதிபதிகள் யார்?
வழக்கின் மனுதாரர்கள்: மனோகர் லால் சர்மா, வி த சிட்டிசன்ஸ், டாக்டர் சாரு வாலி கண்ணா, முகமது அக்பர் லோன, ஹஸ்னாயின் மசூதி, ஷாகீர் ஷபீர், அனுராதா பாஷின். மனுதாரர்களின் வழக்கறிஞர்கள்: ராஜூ ராமச்சந்திரன், கோபால் சங்கரநாராயணன், எம்.எல்.சர்மா, ஷாகீர் ஷபீர் . மனுதாரர்களின் வழக்கறிஞர்கள்: ராஜூ ராமச்சந்திரன், கோபால் சங்கரநாராயணன், எம்.எல்.சர்மா, ஷாகீர் ஷபீர் விசாரித்த அரசியல் சாசன நீதிபதிகள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்.
ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது செல்லும்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும் செல்லும் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு.












Click it and Unblock the Notifications