உ.பி., உத்திரகாண்ட், டெல்லியில் சாலைகளை மறிக்க மாட்டோம் : விவசாயிகள் உறுதி
டெல்லி : உத்திர பிரதேசம், உத்திரகாண்ட், டெல்லி- தேசிய தலைநகர் பகுதிகளில் சாலைகள் மறிக்கப்படாது என பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாளை நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்த சம்யுக்தா கிசான் மோர்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. பகல் 12 மணி முதல் 3 மணி வரை இந்த சாலை மறியல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்ததால் அதனை சரிசெய்து, விவசாயிகள் போராட்டத்திற்கு பலம் சேர்ப்பதற்காக இந்த சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உத்திர பிரதேசம், உத்திரகாண்ட் மற்றும் டெல்லி பகுதிகளில் சாலைகள் மறிக்கப்படாது. அதற்கு பதிலாக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த பகுதிகளில் மட்டுமே சாலைகள் மறிக்கப்படும் என பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். சாலை மறியல் போராட்டம் அமைதியான முறையில் நடத்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதிலும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மட்டுமே விவசாயிகள் மறிக்க வேண்டும். பகல் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே மறியல் நடத்தப்பட வேண்டும். ஆம்புலன்ஸ், பள்ளி வாகனம் உள்ளிட்ட அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு வழிவிட வேண்டும்.
இந்த போராட்டம் முழுக்க முழுக்க அமைதியான முறையிலும், வன்முறை இல்லாமலும் நடத்தப்பட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பிற போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் குடிமக்களின் வாகனங்களையும் சேதப்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மணியுடன் நிறைவடையும் இந்த போராட்டம் முடியும் நேரத்தில் ஒரு நிமிடம் தொடர்ந்து ஹாரன் ஒலிக்கச் செய்யப்படும். விவசாயிகள் ஒற்றுமையை உணர்த்துவதற்காக இது செய்யப்பட உள்ளது. இந்த போராட்டத்தில் பொது மக்களும் பங்கேற்கலாம் என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications