உ.பி. தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்கமாட்டோம்- விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத்
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டோம்; அரசியலைவிட்டு ஒதுங்கியே நிற்போம் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்ட காலத்தில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு 3 விவசாய சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தது. அத்துடன் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

டெல்லி போராட்டம் வாபஸ்
மேலும் வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஆராயவும் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் ஓராண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்தது. டெல்லியில் நடத்தப்பட்ட போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் தாங்கள் வீடுகளுக்கு திரும்புவதாகவும் விவசாயிகள் அறிவித்தனர்.

லக்கிம்பூர் படுகொலைகள்
விவசாயிகளின் இந்த போராட்டம் அடுத்த ஆண்டு நடைபெறும் உ.பி. சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கார் ஏற்றியதில் 4 பேர் கொல்லப்பட்ட கொடூர சம்பவமும் பாஜகவுக்கு எதிராக திரும்ப வாய்ப்பிருக்கிறது. லக்கிம்பூர் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.

யாருக்கும் ஆதரவு இல்லை
இந்த நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரான ராகேஷ் திகாயத், உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் எந்த ஒரு அரசியல் கட்சியையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். அரசியலில் இருந்து ஒதுங்கியே நிற்க விரும்புகிறோம். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் அரசியல் சக்திகள் பிரித்து வைத்திருந்தனர். விவசாயிகள் போராட்டம் இந்துக்களையும் முஸ்லிம்களையும் இணைத்து வைத்திருக்கிறது என்றார்.

நிலைப்பாட்டில் முரண்பாடு
முன்னதாக உ.பி.தேர்தல் களத்தில் யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் நாங்கள் தெரிவிப்போம் என கூறியிருந்தார் ராகேஷ் திகாயத். தற்போது திடீரென எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்க மாட்டோம்; அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்கிறோம் என அறிவித்திருப்பதும் விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications