வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க இயலுமா... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரபரப்பு கேள்வி
டெல்லி: போராட்டங்களுக்கு தீர்வு காணும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க முடியமா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதற்கு மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.
Recommended Video
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் 22வது நாளாக இன்றும் முற்றுகை போராடத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சட்ட கல்லூரி மாணவர் ரிஷாப் சர்மா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை உடனடியாக அகற்ற வேண்டும். சாலை முற்றுகை மற்றும் கூட்டம் காரணமாக போக்குவரத்து பாதித்து மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரிக்க இது வழிவகுக்கும். போராடுபவர்களை அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
கடும் குளிர், விபத்து காரணமாக டெல்லியில் பலியாகும் விவசாயிகள் - 20ஆம் தேதி துக்கதினம் அனுஷ்டிப்பு
சமரச பேச்சு
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, டெல்லி எல்லையில் உள்ள சாலைகளை மத்திய அரசு மூட எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றார். சமசர பேச்சுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். விவசாய சங்கங்கள் தான் பேச்சுவார்த்தை ஏற்க மறுக்கின்றன என்றார்.
ஏற்க முடியாது
இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வேளாண் சட்ட பிரச்சனைக்கு மத்திய அரசும், நாடு முழுவதும் உள்ள முக்கிய விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் அடங்கிய உயர்நிலை குழுவை அமைத்து தீர்வு காணலாம் என்று நீதிமன்றம் விரும்புகிறது. இது உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சனை இல்லாவிட்டால் நாடு தழுவிய பிரச்சனையாக மாறிவிடும். மத்திய அரசின் பதில், தனக்கும் விவசாயிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் உள்ளது. அதை ஏற்க முடியாது என்றார்கள். அத்துடன் வழக்கில் விவசாய சங்க பிரநிதிகளையும் எதிர்மனுதாரராக இணைத்து உத்தரவிட்டது.
பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது
இந்த வழக்கின் விசாரணை இன்றும் தொடர்ந்து நடந்தது. இன்று நடந்த விசாரணையின் போது கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, 'குறிப்பிட்ட சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது அரசியல் சாசனம் வழங்கியிருக்க கூடிய அடிப்படை உரிமை அதே நேரத்தில் அந்தப் போராட்டங்கள் எந்த தனி நபருடைய வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்து விடக் கூடாது.
மக்கள் பட்டினி
ஒட்டுமொத்த கூட்டமும் டெல்லிக்கு நுழைந்தால் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் அளிப்பார்கள்? இவ்வளவு கூட்டத்தை டெல்லியில் வைத்து கட்டுப்படுத்த முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த தனி நபருடைய வாழ்க்கையையோ அல்லது சொத்தையோ ஆபத்தில் விட நாங்கள் விரும்பவில்லை. டெல்லியை முடக்குவதன் மூலம் மக்கள் பட்டினியை அனுபவிப்பார்கள். வெறும் போராட்டம் மட்டும் தீர்வைக் கொண்டு வந்து விடாது பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவேண்டும்' என்றார்.
விவசாயிகள் நிராகரிப்பு
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர், 'விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இல்லை.மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தோமர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதும் இவர்கள் அதனை நிராகரித்து இருக்கிறார்கள் மேலும் பேச்சுவார்த்தைகளிலும் சரியான முடிவுகளை முன்வைக்கவில்லை.
பின்னடைவாகிவிடும்
புதிய வேளாண் சட்டத்தின் கீழ் நிர்வாக நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் எந்த ஒரு விவசாயியும் புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முன்வர மாட்டார்கள் அது அரசுக்கு பின்னடைவாகிவிடும்' என்றார்.
உச்ச நீதிமன்றம் கேள்வி
அப்போது உச்ச நீதிமன்றம் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க முடியமா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. இதற்கு மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் பதில் அளித்தார். இதையடுத்து வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.