ஜாட் சமூக பகுதிகளில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்...அங்கு வாக்கு வங்கியை வைத்துள்ள பாஜக அச்சம்!
டெல்லி: ஜாட் சமூகத்தினர் அதிகம் உள்ள ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
இதனால் ஜாட் சமூகத்தினர் மத்தியில் நல்ல வாக்கு வங்கி வைத்துள்ள பாஜக வாக்குகள் சரியுமா? என்ற கவலையில் ஆழ்ந்துள்ளது.
ஜாட் சமூக தலைவர்களிடம் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட இருக்கும் அனைத்து நன்மைகளையும் பிரச்சாரம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 70 நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது.ஆனால் இதில் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.

ஜாட் சமூக பகுதிகளில் தீவிரம்
விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதிகளில் ஜாட் சமூகத்தினர் அதிகம் உள்ளது. ஜாட் சமூகதத்தினரிடம் பாஜகவுக்கு நல்ல வாக்கு வங்கி உள்ளது. அதாவது இங்குள்ள 40 தொகுதிகளில் பாஜக செல்வாக்கு உள்ளது. இந்த போராட்டத்தால் வாக்கு வங்கி பாதிக்கப்பட்ட கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.

பாஜக தலைவர்கள் சந்திப்பு
இதனால் கடந்த 16-ம் தேதி ஜாட் சமூக தலைவர்களை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயத்துறை இணை அமைச்சரான ஜாட் சமூகத்தை சேர்ந்த சஞ்சீவ் பல்யான் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட இருக்கும் அனைத்து நன்மைகளையும் பிரச்சாரம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். விவசாயிகளை தவறான முறையில் வழிநடத்தும் நபர்களுக்கு மக்களுக்கு சரியான பதில் அளிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஜாட் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

விவசாயிகளுக்கு விளக்குவோம்
இந்த நிலையில் விவசாயத்துறை இணை அமைச்சரான ஜாட் சமூகத்தை சேர்ந்த சஞ்சீவ் பல்யான் ஜாட் சமூக தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:- எங்கும் இல்லாத எதிர்க்கட்சிகளால் இந்த பிரச்சினை அரசியல் மயமாக்கப்படுகிறது என்பதை நாங்கள் விவசாயிகளுக்கு விளக்குவோம். காங்கிரசும் ஆர்.எல்.டி யும் பேரணிகளில் சேரத் தொடங்கியுள்ளன. விவசாயிகளும் இதை இப்போது உணர தொடங்கி இருக்கிறார்கள் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications