விவசாயிகள் போராட்டக்களம் அருகே சாலை தடுப்புகள் அகற்றம்.. பா.ஜ..க.வின் சூழ்ச்சி.. விவசாயிகள் புகார்!
டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.

சாலையில் தடுப்புகள்
ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக உள்ளனர். டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் விவசாயிகள் சாலைகளை மறித்து போராடுகின்றனர். இதனால் டெல்லியில் இருந்து அண்டை மாநிலங்களை இணைக்கும் பெரும்பாலான சாலைகள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளன. விவசாயிகளின் போராட்டத்தால் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் சிரமம்
இதற்கிடையே விவசாயிகள் முக்கியமான சாலைகளை பிளாக் செய்து போராடுகின்றனர். அண்டை மாநிலங்களுக்கு செல்லும் சாலைகள் முடக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். போராட்டக்காரர்களை சாலைகளில் இருந்து அகற்ற உத்தரவிட வேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் நொய்டாவை சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். போக்குவரத்து தடைக்கு காவல்துறைதான் காரணம். பொதுமக்கள் போக்குவரத்துக்கு நாங்கள் இடையூறு செய்யவில்லை என்று விவசாய சங்கங்கள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ''விவசாயிகளுக்கு போராட்டம் நடத்த உரிமை உண்டு ஆனால் காலவரையின்றி சாலைகளைத் தடுக்க முடியாது. பிரச்சினைக்கு நீதித்துறை வடிவம், போராட்டம் அல்லது பாராளுமன்ற விவாதங்கள் மூலம் தீர்வு காணலாம். ஆனால் நெடுஞ்சாலைகளை தடுப்பதன் மூலம் எப்படி தீர்வு காண முடியும்? சாலையில் இருக்கும் தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

சாலை தடுப்பபுகள் அகற்றம்
இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி திக்ரி, காஜிபூர் ஆகிய விவசாய போராட்டகளம் பகுதியில் இருந்த சாலை தடுப்பபுகளை போலீசார் அகற்ற தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக கிராந்திகாரி கிசான் யூனியன் தலைவர் டாக்டர் தர்ஷன் பால் கூறுகையில், ' சாலைகளில் போடப்பட்டிருந்த தடுப்புகள் மற்றும் பல்வேறு தடைகளை அகற்றுவதற்கான முயற்சிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் இந்தியாவின் எதிரிகள் போல காவல்துறை நடந்துகொண்டது அனைவரும் அறிந்ததே. எங்கள் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக பெரிய சிமென்ட் பாறாங்கற்கள், பல அடுக்கு உலோக தடுப்புகள், சாலைகளில் மணல் லாரிகள் மற்றும் பல அடுக்கு ஆணிகளை பொருத்தியவர்கள் அவர்கள்தான்.

பா.ஜ.க.வின் சூழ்ச்சி
பாரதிய கிஷான் யூனியன் சங்க தலைவர் ராகேஷ் திகாத் கூறுகையில், ' நாங்கள் எந்த நிலையிலும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யவில்லை. சாலைத் தடைகள் அகற்றப்பட்டு, இப்போது போக்குவரத்து தொடங்க முடியும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் பா.ஜ.க.வின் சூழ்ச்சிகளை கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் போராட்டத்தின் எதிர்கால போக்கை இதனை வழிநடத்தும் எஸ்கேஎம் முடிவு செய்யும்' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications