'வன்முறையைத் தூண்டும் செய்திகள் கண்ணுக்கு தெரியலையா?' - சுப்ரீம் கோர்ட் கடும் தாக்கு
டில்லி: வன்முறையை தூண்டும் வகையிலான செய்திகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு டெல்லியில் தப்லீக் ஜமாத் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனை ஊடகங்களின் ஒரு பகுதியினர் வகுப்புவாதமாக மாற்றினர் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாமியத் உலமா-ஐ-ஹிந்த் (Jamiat Ulema I Hind) மற்றும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக மத்திய அரசு, இந்திய பத்திரிகை சங்கம், ஒளிபரப்பு சங்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அரசு அக்கறை காட்டவில்லை
இந்த வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி பாப்டே, 'வன்முறையை தூண்டும் நிகழ்ச்சிகளை தடுப்பதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் இது போன்ற தூண்டுதல்களை தடுப்பது முக்கியம். பொதுவாக நியாயமான, உண்மையுள்ள செய்திகளால் பிரச்னையில்லை. மற்றவர்களைத் தூண்டிவிடும் வகையில் செய்தி வெளியிட்டால், அது தான் பிரச்னை' என்று தெரிவித்தார்.
கலவரத்தைத் தூண்டும் ஒளிபரப்பு
மேலும், குடியரசு தின சம்பவத்தின் போது இணையம் துண்டிக்கப்பட்டதை குறிப்பிட்ட நீதிபதி பாப்டே, "விவசாயிகள் டெல்லிக்கு வந்ததால் நீங்கள் இணையத்தை துண்டித்தீர்கள். சர்ச்சைக்குரிய சொல்லை நான் பயன்படுத்துகிறேன். நீங்கள் மொபைல் இன்டெர்நெட்டை முடக்கினீர்கள். இது போன்ற பிரச்னைகள் எல்லா இடங்களிலும் எழுகின்றன. மக்கள் கருத்து சொல்வதை தடுப்பது எங்கள் நோக்கமில்லை. மக்களை கலவரத்திற்கு தூண்டும் ஒளிபரப்பு குறித்தே எங்களது கவலை உள்ளது" என்றார்.
ஏன் கண்டுகொள்ளவில்லை?
மேலும், "இதுபோன்ற கலவரத்தை தூண்டும் செய்திகள் குறித்து மத்திய அரசு ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று தெரியவில்லை. சில செய்திகளின் மீதான கட்டுப்பாடு, சட்டம் ஒழுங்கு நிலைமைகளை சரிபார்க்கும் அளவுக்கு முக்கியமானது. நீங்கள் ஏன் இதில் கண்களை மூடிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்றும் நீதிபதி பாப்டே விமர்சித்துள்ளார்..
கேபிள் டிவி நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டத்தில் மாற்றம் தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.