கைது செய்தவர்களை விடுவித்தால் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை: விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத்
டெல்லி: டெல்லி மோதல் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்தவர்களை விடுதலை செய்தால் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று விவசாய சங்கங்களின் தலைவரான ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 67-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி நகருக்குள் டிராக்டர்கள் பேரணி நடத்தப்பட்டது. அப்போது செங்கோட்டையில் சீக்கியர் கொடி ஏற்றப்பட்டது.

போலீசார் தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தப்பட்டதால் பல இடங்களில் மோதல்கள் நிகழ்ந்தன. இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், எங்களுக்கும் பிரதமர் மோடிதான்.. நாங்களும் அவருக்குதான் வாக்களித்தோம். டெல்லி சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தால் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.
குடியரசு தினத்தன்று நிகழ்ந்த மோதல்கள் தவறானவைதான். செங்கோட்டை சம்பவங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications