கல்லூரி இறுதியாண்டு தேர்வு.. கட்டாயம் நடத்த வேண்டும்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டெல்லி: கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை அளித்துள்ளது. பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக மானிய ஆணையம் வெளியிட்ட ஜூலை 6 சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
Recommended Video
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
பல மாநிலங்கள் பள்ளி பொதுத்தேர்வுகளை ரத்து செய்துவிட்டன. இதேபோல், கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிட்டன. ஆனால் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களையும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று யுஜிசி அறிவித்தது.
அத்துடன் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி, பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் அறிவித்தது.
இதற்கு பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. யுஜிசி.யின் இந்த முடிவை எதிர்த்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்கள்.இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்துவிட்டது. கடந்த 18ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி அசோக் பூஷன் அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன்படி கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக மானிய ஆணையம் வெளியிட்ட ஜூலை 6 சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மாணவர்களை ஊக்குவிக்க மாநிலங்கள் பரீட்சைகளை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநிலங்கள் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று யுஜிசியை அணுகி கோரிக்கை வைக்கலாம். ஆனால் கட்டாயம் தேர்வை நடத்த வேண்டும். தேர்வை நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வை நடத்த தடை விதிக்க கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மாணவர்கள், பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்றே நீட்,ஜேஇஇ தேர்வுகள்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்