பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலி.. டெல்லியில் சோகம்!
டெல்லி: டெல்லி அருகே அலிபூர் மார்க்கெட்டில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி அலிபூர் மார்க்கெட்டில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெயிண்ட் தொழிற்சாலை என்பதால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதுபற்றி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 6 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். அவர்கள் தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பெயிண்ட் தொழிற்சாலையில் உள்ள ரசாயனங்கள் காரணமாக தீயின் வேகம் அதிகரித்தது. இதையடுத்து கூடுதலாக 14 தீயணைப்பு வாகனங்கள் வரவைழக்கப்பட்டன. தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தொழிற்சாலையில் பிடித்த தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இருப்பினும் அந்த பகுதியில் கரும்புகை அதிகளவில் சூழ்ந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு தொழிற்சாலையில் யாரேனும் சிக்கி உள்ளனரா? என தீயணைப்பு வீரர்கள் பார்த்தனர்.
இந்த தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்து எப்படி நடந்து என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications